Monday, March 4, 2019

சிவராத்திரி 2019

ராதே கிருஷ்ணா 05-04-3029


சிவராத்திரி 2019

பதிவு செய்த நாள்

03மார்
2019 
00:00
சிவனின் சொந்த ஊர், உலகிலேயே முதல் நடராஜர் தோன்றிய ஊர், உலகில் உள்ள அனைத்து முனிவர்கள், சித்தர்கள் வந்து வழிபாடு செய்த கோவில். நவக்கிரகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான கோவில். நான்கு யுகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான கோவில்... 
ஆயிரம் சிவ அடியார்கள், ஒரே சமயத்தில் மோட்சம் பெற்று, சகஸ்ஹர லிங்கம் உருவாக்கிய கோவில். 5,000 ஆண்டுகளாய் பூத்துக் குலுங்கும் இலந்தை மரம் உள்ள கோவில். 'தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி' என்ற வாக்கியம் உருவான இடம், மரகத நடராஜர் சிலை உள்ள கோவில்... 
- இப்படி பல அதிசயங்களையும், ஆச்சயர்யங்களையும் கொண்டிருப்பது, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள, திருஉத்தரகோசமங்கை, மங்களநாதர் - மங்களநாயகி திருக்கோவில்.
உத்தரகோச மங்கையில் உள்ள மூலவர், சுயம்பு லிங்கம், 3,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாக கணிக்கப்பட்டுள்ளது. இக்கோவில், 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
உத்தரகோச மங்கையே, சிவபெருமானின் சொந்த ஊர் என்று கருதப்படுகிறது. இத்தலத்து உமா மகேசுவரர் சன்னிதியில் வழிபாடு செய்தால், தம்பதியர் ஒற்றுமை பலப்படும்.
திருவிளையாடல் புராணத்தில் வரும், 'வலை வீசி மீன் பிடித்த படலம்' இத்தலத்தில் தான் நடந்தது. பாண்டிய மன்னர்கள் ஆட்சி அதிகாரத்தில் சிறந்து இருந்த போது, சிறிது காலத்துக்கு, அவர்களது தலைநகராக உத்திரகோசமங்கை இருந்தது. இக்கோவிலின் முக்கிய திருப்பணிகளை, பாண்டிய மன்னர்களே செய்தனர்.
ஆதி காலத்தில், இந்த தலம் சிவபுரம், தட்சிண கைலாயம், சதுர்வேதி மங்கலம், இலந்தி கைப்பள்ளி, பத்ரிகா ஷேத்திரம், பிரம்மபுரம், வியாக்ரபுரம், மங்களபுரி, பதரிசயன சத்திரம் மற்றும் 
ஆதி சிதம்பரம் என்றெல்லாம், பல பெயர்களில் அழைக்கப்பட்டது.
மங்கள நாதர் - மங்கள நாயகி இருவரையும் வழிபடும் முன், அங்குள்ள பாண லிங்கத்தை தரிசனம் செய்தால், முழுமையான பலன் கிடைக்கும். இத்தலத்தில் வழிபாடு செய்வோருக்கு, இம்மையில், அனைத்து நன்மைகளும் கிடைக்கும்; மறுமையில், முக்தி கிடைக்கும்.
மங்கள நாதர் தலத்தில், திருமணம் செய்தால், நிறைய மங்களம் உண்டாகும் என்பது ஐதீகம். எனவே, முகூர்த்த நாட்களில், நிறைய திருமணங்கள் இத்தலத்தில் நடக்கின்றன.
மூலவருக்கு, மங்களநாதர் என்ற பெயர் தவிர, மங்களேசுவரர், காட்சி கொடுத்த நாயகர், பிரளயாகேசுவரர் என்ற பெயர்களும், இறைவிக்கு, மங்களேசுவரி, மங்களாம்பிகை, சுந்தரநாயகி ஆகிய பெயர்களும் உள்ளன.
இறைவி மங்களேசுவரி பெயரில், வ.த.சுப்பிரமணியப் பிள்ளை என்பவர், 'பிள்ளைத் தமிழ்' பாடியுள்ளார். 1901-ல், வெளியான இந்நுால், 1956-ல், மீண்டும் மறுபதிப்பு செய்து வெளியிடப்பட்டது.
இத்தலத்தில் உள்ள கல்வெட்டுக்களில், ராவணனின் மனைவி, மண்டோதரி பெயர் இடம் பெற்றுள்ளது. எனவே, இத்தலம், ராமாயண காலத்துக்கும் முன்பே தோன்றியதற்கான ஆதாரமாக, உள்ளது.
இங்கு வேதவியாசர், காக புஜண்டர், மிருகண்டு முனிவர், வாணாசுரன், மயன், மாணிக்கவாசகர், அருணிகிரிநாதர் ஆகியோர் வழிபட்டு, ஈசன் அருள் பெற்றுள்ளனர்.
இத்தலத்து பஞ்சலோக நடராஜர், வலது புறம், ஆண்கள் ஆடும் தாண்டவமும், இடது புறம், பெண்கள் ஆடும் நளினமான கலைப்படைப்பாக உள்ளார்.
கோவில் வாசலில் விநாயகப் பெருமானும், முருகப் பெருமானும் இடம் மாறியுள்ளனர். இத்தலத்து முருகனுக்கு, வாகனமாக, யானை உள்ளது. இத்தலத்தில், முருகனுக்கு, தன் ஐராவதத்தை இந்திரன் அளித்தான் என்று, 'ஆதி சிதம்பர மகாத்மியம்' கூறுகிறது.
ராமேஸ்வரத்தில் இருந்து, 83 கி.மீ., தொலைவிலும், ராமநாதபுரத்தில் இருந்து, 18 கி.மீ., துாரத்திலும் இக்கோவில் இருக்கிறது. கோவிலின் உட்பிரகாரம் நுழையும்போது, அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படும் இரண்டு யாளிகளின் வாயில், கல்லால் ஆன பந்து உள்ளது. நாம் கையை நுழைத்து பந்தை நகர்த்த முடியும்; ஆனால், வெளியே எடுக்க முடியாது.
பிரதோஷத்தன்று, இங்கு, தாழம்பூ வைத்து வழிபடுகின்றனர். இந்த கோவிலில், சிவனுக்கும் - அம்பாளுக்கும், தாழம்பூ மாலை கட்டி போட்டால், அனைத்து தோஷங்களும் நீங்குவதாக ஐதீகம். திருமணம் உடனே கைகூடும்.
இங்கு, ஆதிகாலத்து வராகி கோவில் உள்ளது. ஒவ்வொரு வெள்ளி, செவ்வாய், ஞாயிறு தினங்களில், ராகு காலத்தில், தொடர்ந்து பூஜை செய்தால், தீராத பிரச்னைகள், திருமண தடை போன்றவை விலகுகின்றன. 
டில்லியை தலைநகராக்கி, 1300ல் ஆட்சி செய்த, அலாவுதீன் கில்ஜி, உத்தரகோசமங்கையில், மரகத கல் நடராஜர் சிலை இருப்பதை அறிந்து, அதை கொள்ளையடிக்க முயன்றான். மங்களநாதர் அருளால், அவன் முயற்சிக்கு, வெற்றி கிடைக்கவில்லை.
இத்தலத்தில் தினமும், முதல்வரின் அன்னத்தான திட்டம் நடக்கிறது. 700 ரூபாய் நன்கொடை வழங்கினால், 50 பேருக்கு அன்னதானம் கொடுக்கலாம்.
காகபுஜண்ட முனிவருக்கு, கவுதம முனிவரால் ஏற்பட்ட சாபம், இத்தலத்தில் தான் நீங்கியது. சிவனடியார்கள், 60 ஆயிரம் பேர், இத்தலத்தில் தான் ஞான உபதேசம் பெற்றனர்.
இங்குள்ள மங்களநாதர் சன்னிதி, மங்களேசுவரி சன்னிதி, மரகத கல் நடராஜர் சன்னிதி, சகஸ்ரலிங்க சன்னிதி ஆகிய நான்கும், தனி தனி கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடி மரத்துடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.
நடராஜர், மரகத கல்லில் இருப்பதால், இத்தலத்தை, சிலர், 'ரத்தின சபை' என்கின்றனர். ஆனால், உலகின் முதல் கோவில் என்பதால், 'இது, எந்த சபைக்கும் உட்படாதது...' என்றும் சொல்கின்றனர். காரைக்கால் அம்மையாரும், இத்தலத்துக்கு வந்து, ஈசனை வழிபட்டு சென்றுள்ளார்.
ஒவ்வொரு மாதமும், அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், கிருத்திகை, சதுர்த்தி நாட்களில், இங்கு, சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. சித்திரை - திருக்கல்யாண வைபவம், வைகாசி - வசந்த உற்சவம், ஆனி - சிவ உற்சவம், ஐப்பசி - அன்னாபிஷேகம், மார்கழி - திருவாதிரை விழா, மாசி - சிவராத்திரி ஆகியவை, இத்தலத்தில் நடக்கும் முக்கிய விழாக்கள் ஆகும்.
மங்களநாதருக்கு, தினமும், காலை, 6:00 மணிக்கு, மதியம், 12:30 மணிக்கு, மாலை, 5:30 மணிக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது. இக்கோவிலில், அதிகாலை, 5:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரையும், மாலை, 4:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரையும், சுவாமி தரிசனம் செய்யலாம்.
மரகத கல் நடராஜர் மீது சாத்தப்பட்டு எடுத்து தரப்படும் சந்தனத்தை, வெந்நீரில் கரைத்து குடித்தால், தீராத நோய் தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை. 
இங்குள்ள மங்களநாதர், லிங்க வடிவில் உள்ளார். அம்பிகைக்கு பிரணவப்பொருள் உபதேசித்த இடம் இது. உலகில் உள்ள, 1,087 சிவாலயங்களிலும் இருக்கும் அருட் சக்திகளை தன்னகத்தே வைத்து விளங்கும், சகஸ்ரலிங்கம் இங்குள்ளது.
இத்திருத்தலத்தில், ஒன்பது தீர்த்தங்கள் உள்ளன. சிவபெருமானால் பரத நாட்டிய கலையை உலக மக்களுக்கு முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்ட திருத்தலமாகும். ஈசன் - ஈஸ்வரி பிறந்த ஊரான, உத்தரகோசமங்கையில், ஒருமுறை பக்தர்கள் வந்து மிதித்தால், சொர்க்கம் செல்வது நிச்சயம் என்ற நம்பிக்கை உள்ளது.
ஸ்ரீராமருக்கு, ஈசன், சிவலிங்கம் வழங்கி, சேது சமுத்திரத்தில் பாலம் போட உத்தரவு வழங்கிய இடம், இது. இத்தலத்தில் மாணிக்கவாசகர் பாடிய, 'பொன்னுாஞ்சல்' பாடலை, குழந்தைகளை, தாலாட்டும்போது பாடினால், குழந்தைகள், உயரமாகவும், உன்னதமாகவும் வாழ்வர் என்பது, பக்தர்களின் நம்பிக்கை.

ஏ.எஸ்.கோவிந்தராஜன்

No comments:

Post a Comment