Friday, March 20, 2020

தன்னை அறியும் மனம்

ராதே கிருஷ்ணா 21-03-2020


Radhe Krishna 14-03-2020

#ராமாயணம்_108_வரிகளில்............................

வால்மீகி முனிவர் எழுதிய ஸ்ரீமத் ராமாயணம் ஆறு காண்டமும் எளிய தமிழில் 108 வரிகளில் கொடுக்கப்பட்டுள்ளது. ராமாயணம் முழுவதையும் படிக்க இயலாதவர்கள் இந்த 108 வரிகளைப் படித்துப் பயன் பெறலாம்.

1. அசல நிர்குண ஆத்ம ராமா
2. ஆனந்தப் பாற்கடல் அறிதுயில் ராமா
3. இந்திரன் முதல்தேவர் வேண்டிட ராமா
4. இகத்தில் அசுரரை அழித்திட ராமா
5. பரத லக்ஷ்மண சத்ருக்னர் ராமா
6. கூடவே பிறந்த தசரத ராமா
7. வில் அம்பு வித்தைகள் பல பயின்ற ராமா
8. யாகமும் தபசும் ரக்ஷிக்க ராமா
9. விசுவாமித்திரன் வேண்டிட ராமா
10. சென்று மந்திரம் கற்றனை ராமா
11. சுபாஹோடு அசுரர் தாடகை ராமா
12. லக்ஷ்மணனுதவியில் வெட்டிய ராமா
13. முனிவர் துதிக்கத் தங்கிய ராமா
14. மூர்க்கர் அண்டாது காத்தயோ ராமா
15. பாலப் பருவம் கடந்திட்ட ராமா
16. பக்தன் ஞானி ஜனகன் ராமா
17. மகளா முலகத் தாயவள் ராமா
18. உறையும் நகர்க்கே நடந்தாய் ராமா
19. கல்லாய்ச் சமைத்த காரிகை ராமா
20. அடியின் தூளிபட் டெழுந்தனள் ராமா
21. மிதிலை ஸ்வயம்வர சபைசேர் ராமா
22. முறித்தே வில்லை ஜயங் கொண்ட ராமா
23. ஜானகி தேவியை மணந்தாய் ராமா
24. பரசுராமன் பலம்பறி ராமா
25. அயோத்தி யடைந்த சுந்தர ராமா

#அயோத்யா_காண்டம்

26. பண்டைப் பகைகூனி தூண்டிட ராமா
27. கைகேயி ஏவலால் தசரதன் ராமா
28. வாக்கைக் காத்திடக் கானகம் ராமா
29. சென்றாய் லக்ஷ்மணனுடன் சீதா ராமா
30. நட்பினால் குஹனைத் தழுவிய ராமா
31. முனிவர் ஆச்ரமம் உறைந்தனை ராமா
32. தசரதன் மாளப் பரதனும் ராமா
33. சித்திரக் கூடம் அடைந்தனன் ராமா
34. சுந்தரப் பாதுகை தந்தனை ராமா

#ஆரண்ய_காண்டம்

35. தென்திசை ஆரண்யம் புகுந்தனை ராமா
36. முனிவர் பலர்முன் தோன்றினை ராமா
37. துஷ்ட விராதனைக் கொன்றனை ராமா
38. தமிழ்முனி அகஸ்தியர் அருள் பெறு ராமா
39. பஞ்சவடித் தலம் உறைந்தனை ராமா
40. சூர்ப்பநகை பங்கம் அடைந்தனள் ராமா
41. கரதூஷணர்கள் அழிந்தனர் ராமா
42. ராவணத் துறவி சீதையை ராமா
43. மாயமாய் அகற்றிட அலைந்தனை ராமா
44. கபந்தன்கை கண்டஞ் செய்தருளிய ராமா
45. அன்புறு சபரிகை விருந்துண்ட ராமா

#கிஷ்கிந்தா_காண்டம்

46. அநும சுக்ரீவர்க் கஞ்சலாம் ராமா
47. அகந்தை வாலியைக் கொன்றுமே ராமா
48. தம்பிக்கே பட்டம் கட்டினாய் ராமா
49. வானர வீரன் அநுமான் ராமா
50. தூதனாய்ச் செல்ல ஏவின ராமா
51. கணையாழி அடையாளம் தந்தனை ராமா
52. அங்கத ஜாம்பவர் தேடினர் ராமா
53. ஜடாயுமுன் சம்பாதி சொன்னான் ராமா
54. மஹேந்திரப் பெயருடைமலை மேல் ராமா
55. அடியவன் அநுமான் நின்றான் ராமா

#சுந்தர_காண்டம்

56. அநுமான் கடலைத் தாண்டினான் ராமா
57. லங்கினி கிழித்து லங்கையுள் ராமா
58. நாமத்தின் மகிமையால் நுழைந்தனன் ராமா
59. அசோகவனத்தில் வணங்கினான் தேவியை ராமா
60. தேவிக்கு மோதிரம் தந்தனன் ராமா
61. ராவண அரக்கனைத் தூஷித்தே ராமா
62. லங்கை எரித்துத் திரும்பினான் ராமா
63. கண்டேன் சீதையை என்றனன் ராமா
64. தேவியின் முடிமணி தந்தனன் ராமா

#யுத்த_காண்டம்

65. தேவியின் பிரிவால் புலம்பிய ராமா
66. வானர சைன்யம் கடற்கரை வந்தது ராமா
67. விபீஷணன் சரணம் அடைந்தனன் ராமா
68. ஆழிக் கணையும் கட்டினை ராமா
69. அணிலும் ஆழிக்கணைக்கு மணலை அளித்து ராமா
70. அரக்கன் கோட்டையைத் தகர்த்தே ராமா
71. தந்திரன் மேல்போர் தொடுத்தாய் ராமா
72. அநுமான் சஞ்சீவி தந்தனன் ராமா
73. கும்பகர்ணன் தலை வெட்டினை ராமா
74. இந்திரஜித்தன் மடிந்தான் ராமா
75. அஹிமஹி ராவணர் அழித்தபின் ராமா
76. விடுத்துநின் கூரிய அம்பினை ராமா
77. ராவணன் கவசம் பேதித்த ராமா
78. ராவணன் தலைகளை அறுத்தும் ராமா
79. அழியா முக்தி தந்தாய் ராமா
80. விபீஷணன் முடிசூட்டினை ராமா
81. கண்டே சீதையை அணைந்தாய் ராமா
82. புட்பக விமானத்தில் திரும்பினை ராமா
83. பரதன் உயிரைக் காத்தனை ராமா
84. அயோத்தி புகுந்து குடிகளை ராமா
85. ஆனந்த வெள்ளத் தாழ்த்தியே ராமா
86. பட்டாபிஷேகம் கொண்டனை ராமா
87. பாரைப் பரம்செய்து ஆண்டனை ராமா
88. மாயப் பழியது தீர்க்கும் ராமா
89. கருப்பிணி யிருந்து காக்கும் ராமா
90. கவிவரன் வால்மீகி பாடிய ராமா
91. லவகுசர் தந்தை யாகிய ராமா
92. அசுவ மேதம் நடத்திய ராமா
93. கோமள ஜானகி நாயக ராமா
94. மறைகள் போற்றிடும் மன்மத ராமா
95. பண்புடன் எம்மைக் காக்கும் ராமா
96. ஞானம் தந்தே நிற்கும்ஓ ராமா
97. துஷ்டர் அழியத் தோன்றிய ராமா
98. நல்லோர் காப்பும் அமைத்தபின் ராமா
99. பன்னக சயனனாய்ச் சென்றாய் ராமா
100. முனிவர் கதையும் முடிந்ததே ராமா
101. பணிவோர் ஜபிக்கும் நாமத்தோன் ராமா
102. கதிரவ குலத்துத் திலகமே ராமா
103. பயமழி மங்கள புங்கவ ராமா
104. நரஹரி ராகவ நாரண ராமா
105. அற்புத மெய்ச்சுக கைவல்ய ராமா
106. அநுமானிதயத் துறையும் ராமா
107. ராம ராம ஜய ராஜா ராமா
108. ராம ராம ஜய சீதாராமா.

ஸ்ரீமத் பாகவதம் சப்தாஹம் (  Srimadh Bhagavatha Sapthaham ) அதாவது ஏழுநாட்களில் ஸ்ரீமத் பாகவதம் முழுமையும் கேட்பதோ உரைப்பதோ ஆகும். 
எவன் ஒருவன் ஸ்ரீமத் பாகவதத்தை கேட்க விழைகிறானோ அபாபோதே இறைவன் அவனுடைய உள்ளத்தைத் தூய்மையாக்குகிறான் என்பதே ஸ்ரீமத்   பாகவதத்தின் ஒப்பற்ற தனிப்பெருமை. 

இதனை கேட்க முயற்சிக்கும் மனிதர் தெரிந்தோ தெரியாமலோ இழைத்த பாவங்கள் மறைய தொடங்குகிறது. பாவங்கள் குறையக் குறைய ஸ்ரீ கிருஷ்ண பக்தி பெருகும். 

ஸ்ரீமத் பாகவதம் வியாசர் வடமொழியில் இயற்றிய பதினெட்டு புராணங்களில் மிகச் சிறப்பானது. பதினெட்டாயிரம்  சுலோகங்களைக் கொண்டது என்று மரபு வழக்காகச் சொல்லப்படுகிறது.  புராணக் கதைகளுடன் ஆன்மிகத் தத்துவங்கள்  வெகு நேர்த்தியாகவும் ஆழமாகவும் பின்னப்பட்டிருக்கும் அருள்நிறை நூல் இது.  இதிலுள்ள வேதாந்தக் கருத்துக்கள் உபநிடதக் கருத்துக்களின் அகலத்தையும் ஆழத்தையும் மிஞ்சும் அளவிற்கு முக்கியமானவை. 

இந்து சமயத்தினரின் அனைத்து பிரிவுகளினாலும்  மிக உயர்வாகப் போற்றப்படும் நூல் பாகவதம். இப்புராணத்தின் வெறும் பாராயணமே சிறந்த ஆன்மிகப் பயனையும், உலகவாழ்க்கையில் நன்மைகளையும் கொடுக்கவல்லது என்ற நம்பிக்கையில் இந்து ஆலயங்களிலும்   இல்லங்களிலும் உற்சவங்களிலும் பாரத நாடு முழுவதும் பூசிக்கப்பட்டு வாசிக்கப்படும் நூல்.   பதினேழு  புராணங்களையும் மகாபாரதத்தையும் இயற்றிய வியாசர், பதினெட்டாவது  புராணமாக பாகவதத்தை இயற்றியதே நாரதரின் உந்துதலினால்தான். 

மேற்படி பதினேழு புராணங்களையும் மகாபாரதத்தையும் இயற்றியும் வியாசருக்கு மன நிறைவு ஏற்படவில்லை. அதற்குக் காரணம் அவையெல்லாவற்றிலும் கதைப் போக்கை மையமாய் வைத்துக்கொண்டு இயற்றியதுதான் என்கிறார் நாரதர்.   இறைவனுடைய   பெருமைகளையும் தத்துவங்களையும் மையமாக வைத்து ஒரு பாகவதபுராணம் எழுதினால்தான் மன அமைதி கிடைக்கும் என்ற நாரதரின் கருத்தை ஏற்கிறார் வியாச ரிஷி.  அதனைத் தொடர்ந்து, பகவானுடைய மஹிமையை தொடர்ந்து வர்ணித்து பாகவதத்தை இயற்றி தன் புத்திரன் சுகருக்கு உபதேசம் செய்கிறார். 

"சுகபிரம்மம்" ( சுகர்), பாண்டவர்களுக்குப் பின் முடி சூடிய  பேரரசன் பரீக்ஷித் மஹா ராஜா அவர்களுக்கு  எல்லா மகரிஷிகளின் முன்னிலையில் கங்கைக் கரையில் ஏழு நாட்களில் ஸ்ரீமத் பாகவதத்தை எடுத்துச் சொன்னார். அவ்வாறு  உபதேசிக்கையில் சூதர் என்பவர் எல்லா மகரிஷிகளுடன் பாகவதத்தை  கேட்கும் புண்ணியத்தை  பெற்றார். பின்பு கலியுகம் தொடங்கிய பின் நைமிசாரண்யத்தில் சௌனகர் முதலிய மகரிஷிகளுடைய வேண்டுகோளுக் கிணங்கி சூதர் பாகவதத்தைத் தாம் சுகரிடம் கேட்டதை எடுத்துரைத்தார்.   

சரி.  சப்தாஹம் என்றால் என்ன ? What is Sapthaham?  

ஸப்தாஹம் என்றால் 'ஏழு நாட்கள் கொண்ட காலவரை'. இக்காலவரையில் ஸ்ரீமத்பாகவதத்தைப் படிப்பதும் கேட்பதும் ஒரு உயரிய திட்டமுறையாகக் கருதப்படுகிறது.   சுகர் ஏழுநாட்களில் பரீக்ஷித்துக்கு இந்த ஸ்ரீமத் பாகவதத்தை எடுத்துரைத்தார். அதுவே முதல் ஸப்தாஹம் எனப்பட்டது.  

பின் கோகர்ணர் என்பவரால் அடுத்த ஸப்தாஹம் நடந்தது. இதற்குப் பின்னர்தான் சூதர் நைமிசாரண்யத்தில் மற்ற ரிஷிகளுக்கெல்லாம் பாகவதத்தை எடுத்துரைத்தார். 

ஸ்ரீமத் பாகவதத்தில் பன்னிரண்டு  ஸ்கந்தங்கள் உள்ளன. முதலிரண்டு ஸ்கந்தங்கள் முகவுரையாக அமைகின்றன. பாரதப்போர் முடிவிலிருந்து கதை தொடங்குகிறது. பரீக்ஷித்தின் பிறப்பு, அவர் அரசனானது, ஒரு ரிஷிபுத்திரனின் சாபத்தை சம்பாதித்துக்கொண்டது, அதன் காரணமாக கங்கைக் கரையில் விரதமிருந்து சுகரிடம் பாகவதம் கேட்கத் தொடங்கியது, 
பிரம்மன் பரம்பொருளிடமிருந்து நான்கே சுலோகத்தில் பாகவதத்தை உபதேசம் பெற்றது, முதலிய விபரங்கள் இம்முதலிரண்டு ஸ்கந்தங்களில் அடங்கும்.   

கங்கை, காசி, கயா, புஷ்காரம், பிரயாகை போன்ற யாத்திரைகளை விட  ஸ்ரீ சுக பாகவதம் மேலான புண்ய பலனை அளிக்கும் என்பது சான்றோர்களின் தீர்ப்பு.  அஸ்வமேத யாகம் போன்ற மிக பெரிய யாகங்களின் பலனையும் மிஞ்சும் புண்ய பலன் எளிய  பாராயணம் மற்றும் ஸ்ரவணத்தின் மூலம் கிடைக்கும். 

இதனை புஷ்கரம் ,  வடமதுரை, துவாரகை(Pushkar, Northern Madurai, Dwaraka)  முதலிய புண்யஸ்தலங்களில் சிரவணம் செய்வ்தால் ஒருவன் சம்சார பயத்திலிருந்து விடுபடுகிறான் என ஸ்ரீமத் பாகவத புராணம் உபதேசிக்கிறது.        

மற்ற சில மாநிலங்களை போல, கார்த்திகை, மார்கழி போன்ற  மாதங்களில் பாலக்காடு, குருவாயூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பல கோயில்களிலும் மண்டபங்களிலும் பாகவத சப்தாஹம் வருட வருடம் சிறப்பாக அங்குள்ள மக்கள் நடத்தி, இறை அருளை அனைவரும்  தொடர்ந்து பெரும் வண்ணம் நடத்தி  கடவுளின் தேசம் என்ற அடையாள மொழிக்கு இலக்கணமாக விளங்கி வருகிறார்கள்.

16 வகை லட்சுமிகள் நம் வீட்டிற்கு வரவேண்டும் அருள் தரவேண்டும் .

1. ஸ்ரீதனலட்சுமி:-நாம் எல்லா உயிர்களிடத்திலும் அன்புடன் இருக்க வேண்டும், போதும் என்ற மனதோடு நேர்மையுடன் வாழ்ந்தால் தனலட்சுமியின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.

2. ஸ்ரீவித்யாலட்சுமி:-எல்லா உயிரினங்களிலும் தேவியானவள் புத்தி உருவில் இருப்பதால் நாம் நம் புத்தியை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அன்பாகவும், இனிமையாகவும் பேச வேண்டும். யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொண்டால் ஸ்ரீவித்யாலட்சுமியின் அருளைப் பெறலாம்.

3. ஸ்ரீதான்யலட்சுமி:- ஸ்ரீதேவியானவள் பசி நீக்கும் தான்ய உருவில் இருப்பதால் பசியோடு, நம் வீட்டிற்கு வருபவர்களுக்கு உணவளித்து உபசரித்தல் வேண்டும். தானத்தில் சிறந்த அன்னதானத்தைச் செய்து ஸ்ரீதான் யட்சுமியின் அருளை நிச்சயம் பெறலாம்.

4. ஸ்ரீவரலட்சுமி:- உடல் பலம் மட்டும் வீரமாகாது மனதில் உறுதி வேண்டும், ஒவ்வொருவரும் தாங்கள் செய்த தவறுகளையும் பாவங்களையும் தைரியமாக ஒப்புக் கொள்ள வேண்டும், நம்மால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, இனி தவறு செய்ய மாட்டேன் என்ற மன உறுதியுடன் ஸ்ரீவரலட்சுமியை வேண்டினால் நன்மை உண்டாகும்.

5. ஸ்ரீசவுபாக்யலட்சுமி:- ஸ்ரீதேவி எங்கும் எதிலும் மகிழ்ச்சி உருவில் இருக்கின்றாள். நாம் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருந்து கொண்டு மறற்றவர்களின் மகிழ்ச்சிக்கும் காரணமாக இருக்க வேண்டும். பிறர் மனது நோகாமல் நடந்தால் சவுபாக்கிய லட்சுமியின் அருளைப் பெற்று மகிழலாம்.

6. ஸ்ரீசந்தானலட்சுமி:- எல்லா குழந்தைகளையும் தன் குழந்தையாக பாவிக்கும் தாய்மை உணர்வு எல்லோருக்கும் வேண் டும். தாயன்புடன் ஸ்ரீசந்தான லட்சுமியை துதித்தால் நிச்சயம் பலன் உண்டு.

7. ஸ்ரீகாருண்யலட்சுமி:- எல்லா உயிர்களிடமும் கருணையோடு பழக வேண்டும், உயிர்வதை கூடாது, உயிர்களை அழிக்க நமக்கு உரிமை இல்லை, ஜீவ காருண்ய ஒழுக்கத்தை கடை பிடித்தால் ஸ்ரீ காருண்ய லட்சுமியின் அருளைப் பெறலாம்.

8. ஸ்ரீமகாலட்சுமி:- நாம் நம்மால் முடிந்ததை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றுமே நம் உள்ளத்தில் உதவ வேண்டும் என்ற எண்ணம் உறுதியாக இருந்தால் நமக்கு ஒரு குறையும் வராது. மேலும் ஸ்ரீ மகாலட்சுமி நம்மை பிறருக்கு கொடுத்து உதவும் படியாக நிறைந்த செல்வங்களை வழங்குவாள்.

9. ஸ்ரீசக்திலட்சுமி:- எந்த வேலையும் என்னால் முடி யாது என்ற சொல்லாமல் எதையும் சிந்தித்து நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடன் செய்தால் ஸ்ரீசக்தி லட்சுமி நமக்கு என்றும் சக்தியைக் கொடுப்பாள்.

10. ஸ்ரீசாந்திலட்சுமி:- நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் வரும் இன்ப துன்பங்களை சமமாக பாவித்து வாழ பழக வேண்டும். நிம்மதி என்பது வெளியில் இல்லை. நம் மனதை இருக்குமிடத்திலேயே நாம் சாந்தப்படுத்த முடியும். ஸ்ரீசாந்தி லட்சுமியை தியானம் செய்தால் எப்பொழுதும் நிம்மதியாக வாழலாம்.

11. ஸ்ரீசாயாலட்சுமி:- நாம் சம்சார பந்தத்திலிருந்தாலும் தாமரை இலை தண்ணீர் போல கடமையை செய்து பலனை எதிர்பாராமல் மனதை பக்தி மார்க்கத்தில் சாய்ந்து ஸ்ரீசாயாலட்சுமியை தியானித்து அருளைப் பெற வேண்டும்.

12. ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமி:- எப்போதும் நாம் பக்தி வேட்கையுடன் இருக்க வேண்டும், பிறருக்கு உதவ வேண்டும், ஞானம் பெற வேண்டும், பிறவிப் பிணித் தீர வேண்டும் என்ற வேட்கையுடன் ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமியைத் துதித்து நலம் அடையலாம்.

13. ஸ்ரீசாந்தலட்சுமி:- பொறுமை கடலினும் பெரிது. பொறுத்தார் பூமியை ஆள்வார். பொறுமையுடனிருந்தால் சாந்தலட்சுமியின் அருள் கிடைக்கும்.

14. ஸ்ரீகிருத்திலட்சுமி:- நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும், மனதை ஒரு நிலைப்படுத்தி நேர்த்தியுடன் செய்தால், புகழ் தானாக வரும். மேலும் ஸ்ரீகீர்த்தி லட்சுமியின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

15. ஸ்ரீவிஜயலட்சுமி:- விடாத முயற்சியும் உழைப்பும், நம்பிக்கையும் இருந்தால் நமக்கு எல்லா காரியங்களிலும் வெற்றி தான். ஸ்ரீவிஜயலட்சுமி எப்பொழுதும் நம்முடன் இருப்பாள்.

16. ஸ்ரீஆரோக்கிய லட்சுமி:- நாம் நம் உடல் ஆரோக் கியத்தை கவனித்தால் மட்டும் போதாது, உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், கோபம், பொறுமை, காமம், பேராசை போன்ற நோய்க் கிருமிகள் நம் மனதில் புகுந்து விடாமல் இருக்க ஸ்ரீஆரோக்கிய லட்சுமியை வணங்க வேண்டும்.

கருடபுராணம் சொல்லும் பல வகை தானத்தின் நன்மைகள்.!

ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா

கருடபுராணம்சொல்லும்நன்மைகள்

1    அன்னதானம் செய்தல்    விரும்பிய உலகத்தில் ஒரு வருடம் வீதம் சுகித்திருப்பார்.

2    கோ தானம் செய்தல்    கோலோகத்தில் வாழ்வர்

3    பசு கன்றீனும் சமயம் தானம் கொடுத்தவருக்கு    கட்டாயம் வைகுண்ட வாசம் உண்டு

4    குடை தானம் செய்தவர்    1000 ஆண்டுகள் வருணலோகத்தில் சுகம் அனுபவிப்பார்

5    தாமிரம,; நெய், கட்டில,; மெத்தை, ஜமுக்காளம், பாய,; தலையனை இதில் எதை தானம் செய்தாலும்    சந்திலலோகத்து சுகங்களை அனுபவிப்பார்

6    வஸ்திர தானம் கொடுத்தவருக்கு    10000 ஆண்டுகள் வாயுலோகத்தில் வாழ்வார்

7    இரத்தம,; கண,; உடல் தானம் கொடுத்தவருக்கு    அக்கினிலோகத்தில் ஆனந்தமாயிருப்பார்

8    ஆலயத்துக்கு யானை தானம் கொடுத்தவருக்கு    இந்திரனுக்கு சமமான ஆசனத்;தில் அமர்ந்திருப்பார்

9    குதிரையும், பல்லக்கும் தானம் கொடுத்தவருக்கு

14 இந்திரன் காலம் வரை வருணலோகத்தில் வாழ்வார்

10    நந்தவனங்களை ஆலயத்துக்கு அளிப்பவர்    ஒரு மன் வந்தரகாலம் வாயுலோகத்தில் வாழ்வார்

11    தானியங்களையும், நவரத்தினங்களையும் தானம் கொடுத்தவருக்கு    மறு ஜென்மத்தில் அறிவாளியாகவும் தீர்க்காயுள் கொண்டவராயும் வாழ்வர்

12    பயன் கருதாது தானம் செய்பவரின் மரணம்    உன்னதமாயிப்பதோடு மீண்டும் பிறவி வாய்ப்பதில்லை

13    நற்செயலை விரும்பி செய்கிறவர்கள்    சூரியலோகத்திற்கு செல்கிறார்கள்

14    தீர்த்த யாத்திரை புரிகின்றனர்    சத்தியலோக வாசம் கிட்டுகிறது

15    ஒரு கன்னிகையை ஒழூக்கமாக வளர்த்து விவாகம் செய்து கொடுப்பவருக்கு    14 இந்திர ஆயுட்காலம் வரை அமராவதியில் சுகித்திருப்பர்

16    பொன் வெள்ளி ஆபரணங்களைத் தானம் கொடுத்தவருக்கு    குபேர லோகத்தில் ஒரு மன் வந்தரம் வாழ்வார்

17    பண உதவி செய்பவர்கள்    ஸ்வேத தீபத்தில் நெடுங்காலம் வாழ்வார்கள்

18    நீர் நிலைகளை சீர்திருத்துபவரும,; உண்டாக்குபவரும்    ஜனலோகத்தில் நீண்டகாலம் ; வாழ்வார்கள்

19    பயனுள்ள மரங்களை நட்டுப் பாதுகாப்பவர்    தபோ லோகத்தை அடைகிறார்

20    புராண நிகழ்ச்சிகளைக் குறிக்கும் சிற்பங்களையுடைய கோபுரம் கட்டும் செலவினை ஏற்றால்    64 ஆண்டுகள் பரமபத்திலிருப்பான்

21    தெய்வம் பவனி வரும் வீதிகளை செம்மைப்படுத்துபவர்    10000 வருடங்கள் இந்திரலோகத்தில் சுகித்திருப்பார்.

22    பௌர்ணமியில் டோலோற்சவம் செய்பவர்    இம்மையிலும் மறுமையிலும் இன்பமடைவார்.

23    தாமிரப்பாத்திரத்தில் எள்ளைத் தானம் கொடுத்தவருக்கு    நற்குலத்தில் உதித்து திடகாத்திரமாக கீர்த்தியோடு பிரகாசிப்பார்

24    சுவையான பழங்களைத் தானம் கொடுத்தவருக்கு    ஒரு கனிக்கு ஒரு ஆண்டு வீதம் கந்தர்வ லோகத்தில் சுகித்திருப்பார்

25    ஒரு சொம்பு நல்ல தண்ணீரை நல்லவர்களுக்குத் தானம் கொடுத்தவருக்கு    கைலாய வாசம் கிட்டும்

26    அருணோதயத்தில் கங்கையில் நீராடுபவர்    60000 ஆண்டுகள் பரமபத்திலிருப்பர்

27    விரதம் நோன்புகளை பக்தியுடன் கடைபிடிப்பவர்    14 இந்திர ஆயுட்காலம் வரை சொர்க்கபுரியில் வாசம் செய்வர்

28    சுதர்சன ஹோமமும,; தன்வந்திரி ஹோமமும் செய்பவர்    ஆரோக்கியவானாக சத்ருக்களில்லாதவராக தீர்க்காயுளுடன் வாழ்வர்

29    ஷோடச மகாலெட்சுமி பூiஐயை முறையோடு செய்பவர்    குலம் பதினாறு பேறுகளையும் பெற்று பெருமையுடன் விளங்குவர்.

*30    இதைப் படிப்பவரும, கேட்பவரும,; புண்ணிய காலங்களில் தானம் கொடுப்பவரும்    தனது அந்திம காலத்தில் நல்ல உலகத்தை அடைந்து இன்புறுவார்கள்.  அவர்களின் பெற்றோரும் மிதுர்களும் முக்தி பெறுகின்றனர்.

ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா



தன்னை அறியும் மனம்
=====================

(பகுதி - 3)
---------------

மனிதனின் தேடுதலுக்கும், தேவைகளுக்கும் அவனது மனதின் நிறைவு இல்லாத தன்மையே காரணமாகின்றது. அதாவது, அவனுக்கு திருப்தியும், அமைதியும் இல்லாத காரணத்தினாலேயே அவன் எதையாவது தேடுவதையும், தேவையையும் வைத்துக் கொள்கின்றான். 

எப்பொழுது, அவனது மனம் திருப்தியை அடைகின்றதோ, அப்பொழுது அமைதியையும், ஆனந்தத்தையும் அவன் அனுபவிக்கின்றான். அமைதி எங்கு வருகின்றதோ, அங்கு ஆனந்தம் தன்னால் வந்து விடுகின்றது.

உதாரணமாக, ஒருவனுக்கு பசி உணர்வு உண்டாகின்றது. உடனே மனம் உணவை நாடுகின்றது. உண்ண உணவு கிடைத்தவுடன், அவனது வயிற்றுப் பசியாறி அவனுக்கு போதும் என்ற மனம் வந்து விடுகின்றது. இதனால் மனம் திருப்தி அடைந்து அமைதியையும், ஆனந்தத்தையும் உணர்கின்றது. 

இனி, அவன் முன்பு எத்தனை விதமான அறுசுவை உணவுகளை வைத்தாலும் அவனது மனம் அந்த உணவை தற்காலிகமாக நாடாது. 

அதுபோன்றே, ஒருவனுக்கு காம உணர்வு உண்டாகின்றது. உடனே அவனது மனம் அந்த ஆசையை பூர்த்தி செய்ய ஒரு பெண்ணை விரும்புகின்றது. அவனது இச்சை அந்த பெண்ணினால் நிறைவடைந்து விட்டால், அவனது மனம் மீண்டும் அந்த பெண்ணைத் தற்காலிகமாகத் தொட விரும்பாது.

இதுப்போன்று, மனமும், உடலும் தன் தேவைகளை ஒருங்கிணைந்து பூர்த்தி செய்து கொள்வதற்காக ஒன்றை ஒன்று சார்ந்து இருந்துக் கொண்டு அனைத்தையும் அனுபவிக்கின்றன.

ஆகவே, புலன்களின் வாயிலாக மனம் ஒன்றை விரும்பி விட்டால், அதனை அடைந்து திருப்தி அடையும்வரை அந்த மனம் ஓயாது. எப்பொழுதும் அதனையே சிந்தித்தவாறு இருக்கும். இது மனதின் இயல்பு எனலாம். இதற்கு உடல் கருவியாகப் பயன் படுகின்றது.

இவ்வாறு ஒன்றை விரும்பிய மனம், அதனை புலன்களின் வாயிலாகவும், உடலின் வாயிலாகவும் அனுபவித்து திருப்தி அடைந்து அத்துடன் தன் தேவையை நிறுத்திக் கொள்கின்றதா எனில், நிச்சயமாக கிடையாது. 

அது தற்காலிகமான திருப்தியை மட்டுமே அடைந்துள்ளது. ஆதலால், அது மீண்டும், மீண்டும் அதன் சுவையை, சுகத்தை விரும்புகின்றது.

அது உணவு உண்பதில், உறவு கொள்வதில், இறைவனை வழிபடுவதில், பணம் சம்பாதிப்பதில், பயணம் செய்வதில் என எதில் வேண்டுமானலும் இருக்கட்டும், இந்த மனம் தற்காலிகமான திருப்தியை மட்டுமே அடைந்து, மீண்டும் அதன் தேவைகளுக்கு தேடிக்கொண்டும், ஓடிக்கொண்டும் இருக்கத்தான் செய்கின்றது.

இதன் விளைவாகவே மனிதன் ஓடிக்கொண்டே இருக்கின்றான், தன் தேவைகளுக்காக தேடிக்கொண்டே இருக்கின்றான். தன் வாழ் நாள் இறுதிவரை ஓயாமல் ஓடி, ஓடி ஓய்ந்து போகின்றான்.

உடலின் ஓட்டத்தையும், மனதின் ஓட்டத்தையும் அறிந்து கொள்ள முடியாமல் ஒரு நாள் இந்த உலகை விட்டும் ஓடி விடுகின்றான்.

இதற்கு என்னதான் தீர்வு?

இந்த மனதிற்கு எப்பொழுது முழுமையான திருப்தி உண்டாகும்?

மனம் என்பது பயிற்றுவிக்கப்பட்ட ஒரு மாபெரும் அந்தக்கரணம் எனலாம். அதாவது, மனிதன் எத்தகைய சூழ்நிலையில், எத்தகைய எண்ணங்களை ஏற்படுத்திக் கொண்டு, அதனை எவ்வாறு சித்தத்தில் சேகரித்து வைத்துக்கொள்கின்றானோ, அதற்கேற்ப அவனது மனம் வடிவமைக்கப்பட்டு, அதன்படி அது அஹங்காரமாக அவனிடம் இருந்து வெளிப்படுகின்றது. 

அதாவது, நமது எண்ணங்களே நம்மை உருவாக்குகின்றது எனலாம்.

அதனால்தான் மகான்கள் மனதினை அறிந்து, அதனை சரியான முறையில் வழி நடத்தக்கூடிய ஆரம்பக்கல்வி முறைகளை அவசியமாகக் கருதினர். 

ஒரு குழந்தை பிறந்தவுடன் அதற்கு எத்தகைய போதனைகளை அதன் மனதிற்கு அருள வேண்டும் என்ற வரைமுறைகளை அன்றைய ஆன்றோர்கள் அறிந்திருந்தனர். அதற்கேற்ற கல்வி முறைகளை அழகாக வகுத்திருந்தனர்.

அதனை அவரவர்கள் தாய் மொழியில் ஆழமாக அந்தக் குழந்தையின் பிஞ்சு நெஞ்சில் பதிய வைத்தனர். அதற்கேற்ற பாடத்திட்டங்கள், பழக்க வழக்கங்கள், பண்பு நலன்கள், பழகும் முறைகள் என மிகப்பெரிய பட்டியலை பரவலாக பட்டி, தொட்டி முதற்கொண்டு தாலாட்டு பாடல்களாக பரப்பி வந்தனர் நம்முடைய முன்னோர்கள்.

மனதினை வளமாக்கும் பயிற்சிகளை பலவாறாக பாமர மக்களிடையே பாடத்திட்டங்களாக அன்று பழக்கப்படுத்தப்பட்டன. அவைகள், இறைவனின் நாமங்களை (பெயர்களை) மந்திரமாக செபித்தல், பிராணயாமம் மற்றும் வாசியோகம் என்ற யோகத்தின் வாயிலாக மனதினை கட்டுப்படுத்துதல் என பலவாறான பயிற்சி முறைகளை பயின்று வந்தனர். 

இத்தகைய முறையான கல்வி முறைகளினாலும், பழக்க வழக்கங்களாலும் மனம் பண்பட்டு மனிதன் மகத்தானவனாக மாறமுடியும் என்று அறிந்திருந்தனர்.

அதி நவீன கண்டுபிடிப்புகளும், அக உணர்வு அனுபவங்களும் அயல் நாட்டினரை விட நம் பாரத நாட்டில் அதிகம் படைக்கப்பட்டதை பல வரலாற்று சான்றுகள் இன்றும் நம்முடைய மன வலிமைக்கும் வளமைக்கும் சான்றாக திகழ்கின்றன.

இவ்வாறு மனதினை வளப்படுத்துவதினால் வருகின்ற நன்மையை மிக அழகாக அகத்திய மாமுனிவர் தன் பாடலில் எடுத்துரைத்துள்ளார்.

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மை யாமே. 
- அகத்தியர் ஞானம்.

மனம் வளமானால் மந்திரம் செபிக்க வேண்டியதில்லை.
மனம் வளமானால் மூச்சு பயிற்சி அவசியம் இல்லை.
மனம் வளமானால் வாசியோகம் வேண்டியதில்லை.
மனம் வளமானால் அதுவே, மனதின் திரம் (மனம் + திரம் = மந்திரம்) எனலாம் என்கின்றார்.

இத்தகைய திரமான, திடமான மனதினை அடைவதற்கு மேற்கண்ட பல வழிமுறைகள் பயன்பாட்டில் இருந்தையும், இன்றும் இருப்பதையும் நம்மால் அறிய முடிகின்றது அல்லவா?

இதில் எது சாத்தியம் என்பது அவரவர்களின் பக்குவத்திற்கும், புரிதலுக்கும் ஏற்றவாறு அமைகின்றது. இருப்பினும், மனதினைக் கொண்டே மனதி(தன்)னை அறிவது அவசியம் ஆகின்றது.

தொடரும்… 🙏பராவித்யா Swami Prabanjanathan

தன்னை அறியும் மனம்
=====================

(பகுதி - 4)
---------------

ஒவ்வொரு மனித(ஜீவ)னின் மனமும் மூன்று முக்கிய குணங்களை அடைப்படையாகக் கொண்டு அமைகின்றது. 

அவைகள், சத்வம், ராஜஸம், தாமஸம் என்பனவாகும்.

இதில் சத்வகுணம் மிகுந்த மனிதனிடம் தூய்மை, நேர்மை காணப்படும். மேலும், தனக்கு நேரும் கஷ்டங்கள், மற்றவர்களால் வருகின்ற விரோதங்களை பொருத்துக் கொள்ளுதல், தேசசேவை, பரோபகாரம், பணிவு, கருணை ஆன்ம ஞானத்தில் ஈடுபாடு போன்ற குண நலன்களைக் கொண்டவனாக இருப்பான்.

ராஜஸகுணம் மிகுந்த மனிதனிடம் சுறுசுறுப்பு, புத்திசாலித்தனம், வீர்யம், பொறாமை, சந்தோஷம், பொய் பேசுதல், தயவின்மை, கர்வம், காமம், குரோதம், துக்கம், ஹிம்ஸை முதலியவைகள் காணப்படும்.

தாமஸ குணத்தின் சுபாவம் அனாவசியமாக துக்கப்படுதல், நாஸ்திக சுபாவம், அதர்ம காரியங்களில் ஈடுபடுதல், புத்தி சக்தி குறைந்து புரிதல் இல்லாமை, தெளிவின்மை, பகுத்தறிவின்மை, குற்றமுள்ள எண்ணங்கள், எந்த காரியத்திலும் ஒழுங்கின்மை, சோம்பேறித்தனம், இரவு, பகல் என எப்பொழுதும் தூங்குதல் முதலிய சுபாவங்கள் அதிகம் காணப்படும்.

இதுபோன்ற மூன்று குணங்களை கொண்ட மனிதன், எந்த குணத்தில் அதிகமாக மேலோங்கி இருக்கின்றானோ அதற்கேற்ற செயலும் அவனிடம் காணப்படும்.

ஆதிமூலமான பரப்பிரம்மத்தின் பரம பதார்த்தங்கள் வெளிப்பட விரும்பியதின் விளைவாக, அனாதி காலமாக அடங்கியிருந்த விதையான அந்த மூலப்பிரகிருதி மகத்தத்துவமாக மாறி, மகத்தத்வமே அகங்கார தத்வமாகி, அகங்கார தத்துவமே மேற்கண்ட மூன்று குணங்களாக வெளிப்பட்டன என சாஸ்திரம் இந்த பிரபஞ்ச உற்பத்தியைப் பற்றி மிகவும் அழகாக வர்ணிக்கின்றது.

இந்த மூன்று குணங்களும் மூலப்பிரகிருதியின் சக்தியாக வெளிப்பட்டு, முக்குணங்களில் முதற் குணமாகிய சுத்த சத்வகுணத்திற்கு “மாயை” என்றும், அந்த மாயையில் பிரதிபலித்த பரப்பிரம்மத்தின் சாயலான ஞான நிழலுக்கு “அந்தரியாமி” அல்லது “ஈஸ்வரன்” என்றும் சாஸ்திரம் அழைக்கின்றது.  

அடுத்து, இரண்டாவது குணமாகிய ராஜஸகுணம் அனேக ரூபங்களாய் பிரிந்து அவித்தைகள் என்ற அறியாமைகளால் ஆனது. 

இந்த அவித்தைகளில் பிரதிபலித்த பரப்பிரம்மத்தின் நிழலுக்கு “ஜீவர்கள்” என்று பெயர். இதனாலேயே ஜீவர்கள் அறியாமையில் இருக்கின்றனர்.

அடுத்து, மூன்றாவது குணமாகிய தாமஸகுணம் ஜீவர்களுக்கு போகத்தை அனுபவிக்கும் பொருட்டு மாயாசகித ஈஸ்வரனுடைய அனுக்கிரகத்தினாலே ஆவரணம், விக்ஷேபம் என இரண்டு சத்திகளாகப் பிரிந்து நின்றது. 

இதில் ஆவரணம் என்பது மறைக்கும் சக்தி என்றும், விக்ஷேபம் என்பது தோன்றும் சக்தி என்றும் அழைக்கப்படுகின்றது.

இவ்வாறு பிரிந்து நின்ற ஆவரணம் என்ற மறைக்கும் சக்தியானது ஒவ்வொரு ஜீவர்களை தன்னை யார்? என்று அறிந்துக் கொள்ள முடியாமல் அறியாமைகளினால் மறைத்துக் கொண்டு, ஜீவர்களின் அநித்தியமான சரீரங்களையும், மனதையும் “நான்” என்று அபிமானிக்கும்படி செய்து, விக்ஷேப சக்தியின் மூலமாக இந்த உடலையும், உலகத்தையும் உண்மையானபடி தோன்றச் செய்து, அனைத்து ஜீவர்களையும் தன் மாயா சக்தியால் மயக்கி, அந்த பரப்பிரம்மமாகவே “தான் இருக்கின்றேன்” என்ற உண்மையை அனைத்து ஜீவர்களுக்கும் தெரிய விடாமல் மறைத்து விடுகின்றது. 

அதாவது, பரப்பிரம்மத்தின் சத்வகுணத்தில் உண்டான மாயை, அந்த மாயையில் பிரதிபிம்பித்த ஈஸ்வரன் மற்றும், ரஜோகுணத்தில் தோன்றிய அறியாமையில் பிரதிபிம்பித்த ஜீவர்களை, தாமஸ குணத்தின் மறைத்தல் மற்றும் தோன்றுதல் என்ற இரண்டு சக்திகளின் வாயிலாக அவர்களின் உண்மை சொரூபத்தை மறைத்து, பொய்யான சரீரங்களையும், மனதையும் உண்மை போன்று தோன்றச்செய்து எமாற்றுகின்றது.

இவ்வாறு, ஒவ்வொரு ஜீவர்களும் மூலப்பிரக்ருதியின் இயல்பான சக்தியாகிய இந்த மூன்று குணங்களும் கலந்து நிற்கின்றது. இதில், அனைத்து ஜீவர்களுக்கும் இந்த மூன்று குணங்களில் ஏதாவது ஒரு குணம் மட்டும் மற்ற இரண்டு குணங்களையும் விட மேலோங்கி நிற்கின்றது. 

இவ்வாறு, இந்த மூன்று குணங்களினால் ஆட்டுவிக்கப்படுகின்ற மனம் தன் இருப்பிடத்தை அறியாத காரணத்தினால், இதுப்போன்ற குண பேதங்களில் ஈடுபட்டு அவ்வப்பொழுது தற்காலிகமான இன்பத்தையும், துன்பத்தையும் அனுபவிக்கின்றது. 

இத்தகைய சுக துக்க அனுபவங்கள் யாவும் புலன்களால் அல்லது இந்திரியங்களால் நுகரும் விசயங்களால் நமக்கு உண்டாகும் உணர்ச்சிகளே. 

இந்திரியங்களின் ஆதாரமும் குணங்களே, விசயங்களின் ஆதாரமும் குணங்களே. அதாவது, விசயங்களின் குணங்களே இந்திரியங்களில் விருத்தியாகின்றன. 

இதையே 'குணங்கள், குணங்களில் செயல்படுகின்றன' என்ற பகவத் கீதை வாக்கியமாக, 'குணா குணேஷு வர்தந்தே' (3-28) என்று அறிவிக்கின்றது.

குணங்களின் பிரிவு, செயல்களின் பிரிவு இவற்றின் தத்துவங்களை அறிந்த ஞானி குணங்கள் அனைத்தும் குணங்களில் செயல்படுகின்றன என்று அறிந்து, அவைகளில் பற்று இன்றி இருப்பான்.

தொடரும்… 🙏

தன்னை அறியும் மனம்
=====================

(பகுதி - 5)
---------------

கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் தோல் போன்ற இந்திரியங்கள் வழியாக உள்வாங்கப்படும் ஒவ்வொரு விசயமும், நமக்குள் பல எண்ணங்களை உண்டாக்குகின்றன. 

அந்த எண்ணங்கள் அவற்றுக்குத் தொடர்புடைய பல்வேறு எண்ணங்களை உண்டாக்குகின்றன. 

விசயங்கள் மட்டுமா எண்ணங்களை உண்டாக்குகின்றன?
 
இன்னதென்று நாம் அறிய முடியாதவாறு, தொடர்ந்து நம்முள் பல எண்ணங்களும், அவற்றுக்குத் தொடர்புடைய வேறு சில எண்ணங்களும் தோன்றியவாறே உள்ளன. 

நாம் விழித்திருக்கும் ஒவ்வொரு கணமும், (கனவு காணும் போதும் கூட) நம்முள் எண்ணங்கள் எழுந்தவாறே இருக்கின்றன. 

கடலில் தொடர்ந்து அலைகள் எழுவதைப்போல், இடைவெளி இன்றி நம்முள் எண்ணங்கள் எழுந்தவாறே இருக்கின்றன. 

ஒரு அலை ஓய்வதற்குள், மற்றோரு அலை உருவாவதைப் போல, ஒரு எண்ணம் மறையும் முன்பே, மற்றொரு எண்ணம் உருவாகின்றது. 

அந்த எண்ணங்கள் வேறெந்த விசயத்திலோ, உணர்விலோ ஒன்றி, அதையே பற்றி நிற்கும் போது, இந்திரியங்கள் விஷயங்களை, உள்வாங்கியவாறே இருந்தாலும், நாம் அவைகளை அறிவதில்லை. 

கண்களும், அவற்றிற்கு ஆதாரமாக மனமும் ஒருங்கே இணைந்தே காட்சியைக் காண்கின்றன. காதுகளும், அவற்றிற்கு ஆதாரமாக மனமும் ஒருங்கே இணைந்தே சப்தத்தை கேட்கின்றன. தோல், நாக்கு, மூக்கு ஆகிய இந்திரியங்களும், இவ்வாறே மனதுடன் ஒருங்கிணைந்து விசயங்களை பெறுகின்றன.

நமக்குள், தொடர்ந்து புலன்கள் வழியாக விசயங்கள் கிரஹிக்கப்பட்டு, அவை சார்ந்த எண்ணங்கள் வளர்ந்தவாறே இருக்கின்றன. நம்முள் வளரும் எண்ணங்கள், இந்திரியங்களைச் செயலாற்றத் தூண்டுகின்றன. 

இவ்வாறு, தானே உள்ளிருந்து எழுகின்ற எண்ணங்கள், வெளி விசயங்களால் உள்ளே நுழைகின்ற எண்ணங்கள் ஆகியவற்றின் ஒட்டு மொத்த தொகுப்பே “மனம்” எனப்படுகின்றது.

இதுவரை நாம் கேள்விப்பட்டேயிராத ஒரு விசயம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். நம் சித்தத்தில் அது குறித்த பதிவுகளே இருக்காது. அந்த விசயம் நமக்குப் பிரியமானதா, பிரியமற்றதா என்றோ, அதை நாம் அனுபவிப்பது தர்மமா, தர்மமில்லையா என்றோ புத்திக்குத் தெரியாது. 

நம் மனமோ, அந்த விசயங்கள் குறித்த எண்ணங்களே இன்றி இருக்கின்றது. இது மனதின் நிர்விகல்பமான நிலை. 

அந்த விசயத்தைக் குறித்து கேட்டோ, படித்தோ அறிந்ததும், மனம் அது குறித்த கருத்துக்களை உருவாக்கிக் கொள்கின்றது. 

இவைகள் சங்கல்பங்கள் (முடிவான கருத்துகள்) என்று அழைக்கப்படுகின்றன.
 
எந்த ஒரு விசயமும், புலன்களுக்கு, முதன் முறையாகப் பரிச்சயம் ஆகும் வரை, மனம் அது குறித்த எண்ணங்கள் இன்றி, சித்தம் அது குறித்த பதிவுகள் இன்றி நிர்விகல்பமாக இருக்கின்றன. 

புலன்களால், தானாக இன்னதென்று அறிய முடியாத விசயத்தை, மனம் பல்வேறு கோணங்களிலும் கேள்விகளை எழுப்பி, சித்தத்தில் உள்ளப் பதிவுகளின் துணை கொண்டு, புத்தியின் முடிவெடுக்கும் திறனால் தீர்மானித்து அறிகின்றது.

இந்த அறிவு, உணர்வு சார்ந்த தீர்மானங்களே சங்கல்பங்கள் எனப்படுகின்றன. 

மென்மேலும் விளையும் அனுபவங்களால் இந்த சங்கல்பங்கள் புதுப்பிக்கப்படுகின்றன. புதிய அறிவால், மனம் ஏற்கனவே இருந்த அறிவை புதுப்பித்தவாறே இருக்கின்றது. 

புதிய உணர்வால், மனம் ஏற்கனவே விளைந்து பதிந்த உணர்வுகளை தெளிவுபடுத்திக் கொண்டே இருக்கின்றது. இது ஒரு தொடர் நிகழ்வு எனலாம். 

இது எந்த காலத்திலும் நின்று போவதில்லை. 

சங்கல்பம் தான் மனம். மனமே சங்கல்பம் எனலாம். 

சங்கல்பம் மனதிலேயே உள்ளது. எங்கு சங்கல்பம் உள்ளதோ, அங்கு மனம் உள்ளதென்று அறியப்படுகின்றது. எப்பொழுதும் சங்கல்பமும் மனமும் பிரிவதில்லை.

இவ்வாறு, தொடர்ந்து எழும் எண்ணங்கள் எல்லாம், மனதின் மற்றோரு பரிமாணமான 'அஹங்காரம்' என்ற எண்ணத் தொகுப்பை ஆதாரமாகக் கொண்டே விளைகின்றன. 

‘நான்’ என்ற உணர்வு அகந்தை அல்லது “அஹங்காரம்” எனப்படுகின்றது. 

இது என்னுடையது என்ற உணர்வு “மமதை” எனப்படுகின்றது. 

இந்த இரண்டு கற்பனைகளும் விளைவது மனதிலேயே. இந்த இரண்டு எண்ணங்களே, மற்ற எல்லா எண்ணங்களுக்கும் மூலமாக இருக்கின்றன. 

நான் காரியமாற்றுபவனாக இருக்கின்றேன் என்னும் எண்ணமே ‘அஹங்காரம்’ என்று கூறப்படுகின்றது.

அந்தக்கரணங்களில், 'நான்' என்ற ஸ்புரணம் (அகந்தை), அது சார்ந்தெழும் 'எனது' உள்ளிட்ட விருத்திகளைத் தொகுத்து ‘அஹங்காரம்’ என்றும் அழைக்கலாம்.

பொதுவாக நமக்கு நாமே ஒரு உருவகம் தந்து கொள்வது மட்டுமின்றி, நாம் நம்மைச் சுற்றி உள்ள பலவற்றுடன் ஒரு தொடர்பை, பந்தத்தை ஆதாரமாக வைத்துக் கொண்டே எண்ணங்களை வளர்க்கின்றோம். 

நம் நாடு, நம் மொழி, நம் இனம், நம் ஊர், நம் வீடு, நம் குடும்பம் என்றும், என் மனைவி, என் குழந்தை, என் தொழில், என் பெற்றோர் என்றும் நம்மை ஆதாரமாகக் கொண்டே எல்லாவற்றையும் அணுகுகின்றோம். 

பொதுவில், 'நான் இன்னார்' என்ற எண்ணமான அகந்தையே, 'இது என்னுடையது' என்ற எண்ணமான மமதைக்கு மூலமாக விளங்குகின்றது. 

அதுவே 'இதை நான் செய்கின்றேன்' என்ற எண்ணத்திற்கும் மூலமாகின்றது. 

'நான்' என நமக்கு ஒரு (நாம, ரூப, குண, திறன் சேர்ந்த) இருப்பு இருப்பதான கற்பனையே, சுற்றிலும் உள்ளனவற்றுடன் நம்மைத் தொடர்புபடுத்தி, 'இது என்னுடையது' என்ற கற்பனையை உண்டாக்குகின்றது.

அந்தக் கற்பனையே, நம்மைச் சுற்றிலும் நிகழும் செயல்களில் நம்மை இணைத்துக் கொண்டு, 'நான் இந்தச் செயல் செய்கின்றேன்' என்ற கற்பனையை விளைக்கின்றது. 

அந்தக் கற்பனையின் விருத்தியே, இந்தச் செயலின் விளைவால், 'நான் சுகமடைகின்றேன்' அல்லது 'நான் துக்கப்படுகின்றேன்' என்ற கற்பனைகளை உண்டாக்குகின்றது. 

இவை யாவும் வெறும் எண்ணங்களே. 

நாம் 'எனக்கு ஒரு இருப்பு உண்டு' என்று, நம் மனதோடு நம்மைச் சம்பந்தப்படுத்திக் கொள்ளும் போது, நான் இந்தச் செயலை செய்கின்றேன் என்று பாவித்துக் கொள்கின்றோம். அதனால், 'நான் இன்பத்தை (அல்லது துன்பத்தை) அனுபவிக்கின்றேன்' என்றும் பாவனை செய்து கொள்கின்றோம்.

'நான்' இல்லையேல், 'எனது' இல்லை. நான் (இன்னாராக, இக்குணங்களுடன், இத்திறன்களுடன்) இருக்கின்றேன் என்ற கற்பனை முதலில் விளைகின்றது.
 
அது, நமக்கு புறத்தில் உள்ள ஒரு பொருளைக் கண்டவுடன் (அல்லது பொருளைப் பற்றி நினைத்தவுடன்), அந்தப் பொருளில் பரவி வியாபிக்கின்றது. 

அந்த வியாபகத்தின் பிரதிபலிப்பே, விளைவே, 'இது என்னுடையது / இது என்னுடையதல்ல' என்னும் கற்பனை. 

நம் இந்திரியங்கள் மீதும், நம் உடல் மீதும், 'இதுவே நான்' அல்லது 'இவை என்னுடையவை' என்ற அபிமானமாக விளையும் மூல எண்ணமே அஹங்காரம். 

இதன் ஆதாரத்தில் விளையும் அபிமானங்களே, 'நான் செயல் செய்பவன்', 'நான் அனுபவிப்பவன்' ஆகிய எண்ணங்கள். 'நான் கர்த்தா (காரியமாற்றுபவன்)', 'நான் போக்தா (அனுபவிப்பவன்)' என்று உண்டாகின்றது. 

அஹங்காரத்தின் இரு இயல்புகள் நான் செய்கின்றேன், நான் அனுபவிக்கின்றேன் என்பதாகும்.

இது நான், இவை என்னுடையவை, இதை நான் செய்கிறேன் எனக் கருதும் இயல்பு கர்த்ருத்வம். அதாவது, இந்த உடலுக்கு, இந்திரியங்களுக்கு, செயல்களுக்கு, நான் சொந்தக்காரன் என்ற எண்ணம். 

செயல்களுக்கு நான் அதிகாரி என்ற ஆதாரத்தில், செயல்களால் விளையும் சுக துக்கங்களுக்கு நான் உரிமையாளன் என்றும் கருதுகிறது. 

சுகங்களையும், துக்கங்களையும் தானே அனுபவிப்பதாகக் கருதுகிறது. 

விசயங்கள் நமக்கு அனுகூலமாக, பிரியமானதாக இருப்பின், நாம் சுகம் அனுபவிப்பதாகக் கருதுகின்றோம். 

விசயங்கள் நமக்கு பிரதிகூலமாக, பிரியமற்றதாக இருப்பின், நாம் துக்கம் அனுபவிப்பதாகக் கருதுகின்றோம். 

ஆக, நம் அஹங்காரத்தின் விளைவாகவே, நாம் சுக துக்கங்களை அனுபவிப்பதாகக் கருதுகிறோம்.

இத்தகைய அஹந்தையும், மமதையும் நீங்கி ஆனந்தமுடன் வாழ்வதையே மோக்ஷம் என்று வள்ளுவப்பெருமானர் தன் குறட்பாவில் மிக அழகாக அறிவுறுத்துகின்றார். 

'யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த வுலகம் புகும்' 

உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக்கருதலுமாகிய மயக்கத்தை போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலையை அடைகின்றான்.

இதையே “மோக்ஷம்” என்றும் “நிலையான ஆனந்தம்” என்றும் சாஸ்திரம் அறிவிக்கின்றது.

குறிப்பு:-
-----------

மேலே உள்ள அட்டவனையை புரிந்துக்கொண்டு, அஹங்காரத்தின் வெளிப்பாடான மூன்று குணங்களையும்  கடந்து, அறிவை, அறிவால் அறிந்து, “குணாதீதன்” என்ற நிலைக்கு உயர்ந்துவிட்டால், அதன் பிறகு இந்த பிரக்ருதிக்கு காரணமான அந்த ஆதிமூலமே “நான்” என  ஆனந்தமுடன் என்றும் இருக்கலாம். 

அனைத்திற்கும் அதுவே காரணம் என்பதையும், இந்த “நான் என்பது அஹங்காரம் கற்பித்துக்கொண்ட வெளிப்பாடு என்பதையும் அறிந்துகொள்ளலாம்.

தொடரும்… 🙏பராவித்யா Swami Prabanjanathan

தன்னை அறியும் மனம்
=====================

(பகுதி - 6)
---------------

“நன்மை, தீமை, மற்றும் சுகம் - துக்கம் என்பன மனதினால் விளைபவை. ‘நாம்’ உண்டாக்குவதல்ல.

விழிப்பு நிலையில் பல்வேறு எண்ணங்களை கொண்டு, அதற்கேற்ற செயலைச் செய்து, அதனால் உண்டாகின்ற சுக, துக்கங்களினால் பாதிக்கப்பட்டு, மன அமைதி இன்றி, இந்த உலகத்தை உண்மை என்று கருதி ஓடிக்கொண்டிருக்கின்றோம்.

அதுப்போலவே, கனவு நிலையில் பல்வேறு எண்ணங்களைக் கொண்டு, அதற்கேற்ற செயலைச் செய்து, அங்கும் பயம், துக்கம், சந்தோசம் என பலவாறான பாதிப்புகளை அடைந்து, அந்த உலகத்தையும் உண்மை என்று அபிமானிக்கின்றோம். 

அந்த கனவு உலகில் இருக்கும்வரை இந்த விழிப்பு நிலை உலகத்தையும் உறவுகளையும், விழிப்பு நிலையில் இருக்கும் வரை கனவு நிலை உலகத்தையும், உறவுகளையும் மறந்து விடுகின்றோம்

கனவு கலைந்து விழிப்பு நிலைக்கு வந்தவுடன் இந்த விழிப்பு நிலை உலகத்தை உண்மை என்று அபிமானிக்கின்றோம்.

இவ்வாறு மனம் கற்பனைகளினால் வாழ்ந்து கொண்டு இருப்பதை நாம் அறிய மறுக்கின்றோம்.

அடுத்து, விழிப்பு, கனவு என்ற இந்த இரண்டு நிலைகளையும் கடந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் பொழுது, எதுவுமே தெரிவதில்லை. அந்த உலகத்தை அறிய முடிவதில்லை.

இந்த விழிப்பு நிலையில் கண்ட உலகம்,  நம்முடைய உறவுகள், நம்முடைய உடல், மனம் என எதுவுமே அங்கு இருப்பதில்லை. 

ஏதுமற்ற சூனியம் மட்டுமே அந்த ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாக தவறாக நினைத்துக் கொள்கின்றோம்.

ஆனால், உறக்கம் கலைந்து விழிப்பு நிலைக்கு வந்தவுடன் நான் நன்றாக, ஆனந்தமாக உறங்கினேன் என்று எப்படி அந்த ஆழ்ந்த உறக்க அனுபவத்தை உணர முடிந்தது?.

கனவு நிலையில் கண்ட கனவுகளை எவ்வாறு விழிப்பு நிலையில் அறிய முடிந்தது?

விழிப்பு நிலை அனுபவங்களை தற்பொழுது அனுபவித்துக் கொண்டிருப்பது எது?

கனவு உலகத்தை, கனவு கலைந்ததும் கற்பனை என்று ஒப்புக்கொள்கின்ற மனம், விழிப்பு நிலையான இந்த நினைவு உலகத்தை கற்பனை என்று ஒப்புக்கொள்ள மறுக்கின்றது. 

அதற்குக் காரணம் இந்த நினைவு உலகத்தின் நம்முடைய அனுபவங்கள் தொடர் நிகழ்வுகளாக இருப்பதினால், இன்று தொடங்கிய ஒரு காரியத்தை மறுநாள் விட்ட இடத்தில் இருந்து தொடங்க முடிகின்றது என்பதினால் இதை உண்மை என்றும், கனவை கற்பனை என்றும் இந்த மனம் நம்புகின்றது. 

இங்கு கால, தேசத்தை மனம் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. அதனால்தான் இதுபோன்ற பிரச்சனைகள் மனதிற்கு உண்டாகின்றது. 

அதாவது, கனவு உலகத்தில் நாம் வாழ்ந்து முடிகின்ற கால, தேசத்தை (கனவு காணுகின்ற நேரமும், இடமும்) எவ்வளவு நேரம், எங்கு இருந்தோம் என்று கணக்கிட முடியாமல் இருக்கின்றதோ, அதுபோன்று, நினைவு உலகத்தில் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கின்ற காலமும், தேசமும் உண்மையில் கணக்கிட முடியாமல் இருக்கின்றது. 

அது எவ்வாறு எனில், இந்த உலகத்தில் ஒருவர் இந்தியாவிலிருந்து வெளி தேசங்களுக்கு செல்வதாக வைத்துக் கொள்வோம். அவர் பயணம் செய்த ஒரு நாள் பயணத்தில் ஒரு இரவோ, அல்லது ஒரு பகலோ அவருக்கு இல்லாமல் எங்கு போய் விடுகின்றது.

அதாவது, இங்கு பகலில் புறப்பட்டவர் அந்த தேசத்தில் மீண்டும் பகலில் இருக்கின்றார். அல்லது இரவில் புறப்பட்ட இவர் அந்த தேசத்தில் மீண்டும் இரவில் இருக்கின்றார்.
 
ஆகவே, இந்த கால, தேசங்களை நாமாக கற்பித்துக்கொண்டு அதை 24 மணி நேரத்தில் ஒரு நாள் என்று இந்த பூமியில் மட்டும் கணக்கிட்டு வைத்துக்கொண்டுள்ளோம். 

அதுவே, வெட்டவெளியில் இந்த கணக்கு ஒத்துவராது. 

ஆகவே, நம்முடைய அல்ப மனதினாலும், புத்தியினாலும் இவைகளை கடக்க முடியாது.

 கனவு காணுகின்ற காலம், தேசம் எவ்வளவு என்று எவ்வாறு நமக்குத் தெரியாதோ, அவ்வாறே நினைவில் காணுகின்ற காலம், தேசம் எவ்வளவு என்று நமக்குத் தெரியாது.

அதனாலேயே மனிதனுக்கு தன் ஜனன, மரணம் தெரிவதில்லை. பிறக்கின்ற நேரத்தை வைத்து காலத்தைக் குறித்துக் கொண்டாலும், அந்த கால, நேரம் இவனுக்கு ஆழ்ந்த உறக்கத்தில் எங்கு இருந்தது? இவன் தாயின் கற்பத்தில் வருவதற்கு முன்பு எங்கு, எவ்வளவு காலம் இருந்தான்?

காலம் என்பது காலதேவன் என்ற பரப்பிரம்மத்தினிடம் இருந்து வெளிப்பட்ட சக்தியாகும். அதன் கட்டுப்பாட்டில் படைத்தல், காத்தல், அழித்தல் என்பது உள்ளது. மனிதன் நினைப்பது போன்று அதை அவன் இஷ்டத்திற்கு மாற்றி அமைத்துக் கொள்ள முடியாது.

இதை அறியாமல், இவனே செய்வது போன்று அனைத்தையும் அபிமானித்துக்கொள்கின்றான். மேலும், இவன் நல்லவன் - அவன் கெட்டவன், இவன் ஆஸ்திகன் - அவன் நாஸ்திகன், இவன் பணக்காரன் - அவன் ஏழை, இவன் ஞானி - அவன் அஞ்ஞானி, இவன் யோகி - அவன் போகி என்று பலவாறாக மனதினால் கற்பித்துக் கொள்கின்றான்.

அவரவர்கள் மனம் குழந்தைப் பருவத்தில் இருந்து எப்படி பயிற்றுவிக்கப்படுகின்றதோ, அதற்கேற்ப அவனது தற்போதைய வாழ்க்கை முறை இருக்கின்றது. மேலும், இதில் அவனது பூர்வ சம்ஸ்காரங்களுக்கு ஏற்ப அவனுக்கு சூழ் நிலைகள் உண்டாக்கி கொடுக்கப்படுகின்றது.

இது எதுவுமே இவனது கையில் இல்லை. ஆனால், இவன் அனைத்தையும் தான் செய்வதாக கருதுகின்றான்.

இதுவே, மாயை எனப்படுகின்றது.

தொடரும்... 🙏பராவித்யா Swami Prabanjanathan

தன்னை அறியும் மனம்
=====================

(பகுதி - 7)
---------------

“என்னுடைய அனுபவங்களை மாயை என்று கூறுகிறீர்களே, இந்த உலகத்தில் இத்தனை காரியங்கள் கண்கூடாக நடந்து கொண்டிருக்கும்போது இதை எப்படி மாயை என்று கூறலாம்?” 

மாயை என்றால் அடியோடு இல்லாத வஸ்து என்று நினைத்துக் கொள்வதினால் இந்த கேள்வி எழுகின்றது. 

மாயை அப்படி இல்லை. 

அது இருப்பதாக நினைக்கின்ற வரை இருப்பதாகவே தோன்றும். அது, ‘முயல் கொம்பு’ போன்று இல்லை. ‘கானல் நீர்’ போன்று இருக்கின்றது.

கானல் நீர் கண்ணுக்குத் தெரிகின்றது. ஆனால் அதில் நீர் இல்லை. அதைக் குடித்து நாம் தாகம் தணித்துக் கொள்ள முடியாது. 

கானல் நீர் உண்மையான நீர் இல்லை என்று அறிந்தவர்களுக்கும்கூடக் கானல் நீர் தெரியத்தான் செய்யும். 

அதுப்போலவே, உலகை மாயம் என உணர்த்த வந்த ஞானிகளுக்குக் கூட இந்த உலகம் தெரியத்தான் செய்யும். 

ஆனால், அது சத்தியமல்ல என்று அவர்கள் அறிவார்கள்.

இந்த உலகமும் பிரம்மத்தைச் சார்ந்த ஒரு தோற்றமே, அதற்கு ஆதாரமான பிரம்மம் ஒன்றே நிரந்தர உண்மை என்று அறிகின்ற பொழுது, காரியங்கள் அனைத்தும் நின்று போகின்றன.

அடியோடு இல்லாத வஸ்துவல்ல இந்த உலகம். ஞானம் வருகின்ற வரையில் இருக்கின்ற தோற்றம் அது. 

கனவு காண்கிற வரையில் கனவு உணமையாக இருந்து, நாம் விழித்துக் கொண்ட பிறகு கனவு உண்மையல்ல என்பதுப் போல, நாம் அஞ்ஞானத்தில் தூங்கிக் கொண்டிருக்கிற வரையில் உலகம் உண்மையாகத் தெரிந்து, நாம் ஞான நிலையில் விழித்துக் கொண்டவுடன் மறைந்து போகின்றது. 

இந்த மாயை அறிய விரும்புகின்ற ஜீவர்களுக்கு அவன் அருள் இருந்தால் மட்டுமே அனைத்தும் விளங்கும்.

அந்த அகண்ட பரிபூரண வஸ்துவே அனைத்து ஜீவர்களிலும் அந்தர்யாமியாக இருந்துக் கொண்டு, அவைகளை வழி நடத்துகின்றது.

அதாவது, பொம்மலாட்டம் நிகழ்ச்சியில் கவனித்தோமானால், அங்கு ஒவ்வொரு பொம்மையும் பலவிதமான செயல்களை மிகவும் நுட்மாக செய்வதை நாம் காண்கின்றோம். 

இவைகளைக் காண்கின்ற குழந்தைகளுக்கு அந்த பொம்மை ஆடுவதும், ஓடுவதும் என பார்பதற்கு உண்மைப் போன்றே தெரியும். ஆனால், அந்த பொம்மைகளை அந்த திரைக்கு பின்னால் இருந்துக்கொண்டு ஒருவன் ஆட்டுவிப்பதையும், அவன் நிறுத்தினால் அந்த பொம்மைகள் செயல் இழப்பதையும் அந்த குழந்தை அறியாது. காரணம், அதற்கு அதை அறிந்துக் கொள்கின்ற அளவிற்கு (மனம்) புத்திசக்தி இன்னும் வளரவில்லை.

இதையே, நம்முடைய அன்றாட வாழ்வில் நடக்கின்ற இந்த பொம்மலாட்ட நிகழ்வுகளை அந்தந்த பொம்மையின் (உடலின்) உள்ளே இருந்துக் கொண்டு ஒருவன் ஆட்டுவிக்கின்றான் என்பதை அறியக்கூடிய (மனம்) புத்தி சக்தி பெரும்பாலானவர்களுக்கு இன்னும் உண்டாகவில்லை எனலாம்.

இந்த ஜீவர்கள் என்ற பொம்மைகளை ஆட்டுவிக்கின்றவன் ஆட்டத்தை நிறுத்திவிட்டால், இந்த பொம்மை (உடல்) செயல்படாது. 

இதனை நாம் இறப்பு என்கின்றோம்.

இறப்புக்கு முன்பு, தன்னுடைய உண்மை இருப்பு நிலையான “நான் இருக்கின்றேன்” என்பதை மனிதனை தவிர மற்ற எந்த ஜடப்பொருட்களும், மிருகங்களும் அறியாது. 

காரணம், அவைகளுக்கு தன் இருப்பை அறியும் ஆற்றலான ஆறாவது அறிவு கொடுக்கப்படவில்லை. ஆனால், மனிதனும் அந்த ஆறாவது அறிவைக் கொண்டு தன்னை அறியாமல் இருப்பது மனிதப்பிறவியில் மிகப்பெரிய இழப்பு எனலாம்.

அந்த இருப்பு உள்ளே இருப்பதினால்தான் அவனது கண்கள் காட்சியைக் காண்கின்றது. காதுகள் கேட்கின்றது. மூக்கு நுகர்கின்றது, நாக்கு சுவைக்கின்றது, தோல் உணர்கின்றது. இந்த இந்திரியங்களின் அனைத்து அனுபவங்களுக்கும் அந்த இருப்பே (ஆத்மாவே) காரணமாக இருக்கின்றது.

அதுவே, அந்த இருப்பு வெளியேறியவுடன் இறப்பு ஏற்பட்ட உடலில், இந்த அனைத்து இந்திரியங்களும் இருக்கின்றன. 

இருப்பினும், அதனால், தன்னை சுற்றிலும் அமர்ந்துக் கொண்டிருக்கின்ற உறவுகளை காண முடிவதில்லை, காதுகள் இருந்தும் மற்றவர்கள் கதறி அழுவதை கேட்க முடியவில்லை. மூக்கு இருந்தும், அருகே ஏற்றி வைக்கப்பட்ட ஊதுவற்தியின் நறுமணத்தை முகர முடியவில்லை. நாக்கு இருந்தும் தனது வாயில் போடும் வாக்கரிசையை சுவைக்க முடியவில்லை. தோல் இருந்தும் கட்டிய மனைவி தொடுவதை உணர முடிவதில்லை.

ஆக, இந்த இறப்பு ஏற்பட்ட உடல், இயங்கிக் கொண்டிருந்ததற்கு காரணமான இருப்பு எது? 

என்பதை இந்த மனம் (புத்தி) அறிந்துக் கொள்வதில் அக்கரைக் காட்டாமலேயே இருந்து விட்டு, இறந்த ஸ்தூல உடலில் இருந்து, சூக்ஷுமமாக வெளியே வந்து, சேகரித்துக் கொண்ட சம்ஸ்காரங்களுக்கு ஏற்ப தனக்கு உடலை தேர்ந்தெடுக்க விரும்புகின்றது.

அதாவது, இந்த ஸ்தூல உடலை பயன்படுத்தி், புலன்களின் வாயிலாக அறிந்துக் கொண்ட விசயங்களையும், பூர்வ சம்ஸ்காரங்களையும் கொண்டு, அவைகளின் ஒட்டுமொத்த தொகுப்பான  இந்த  சூக்ஷுமமான மனம் உண்டாகி, அவைகளை ‘இன்னது’, ‘இன்னது’ என்று புரிந்துக் கொள்ள புத்தி சக்தியாக மாறி, அவைகளை சித்தத்தில் சேகரித்து, அதனை அஹங்காரமாக இதுவரை வெளிப்படுத்தி வந்தது. 

இந்த மனமே பரு உடல் கிடைக்க காரணமாக இருந்தது. 

அதாவது, அதன் இதற்கு முந்தைய பல்வேறு பிறவிகளினால் உண்டான பூர்வ சம்ஸ்காரங்களின் பதிவுகளுக்கு ஏற்ப அவைகளை அனுபவிக்க விரும்பி அதற்கேற்ற உடலை உருவாக்கிக் கொண்டது.

இதிலிருந்து இந்த மனம் அழியாமல், உடல் எடுக்கின்ற பிறவி நிற்காது என்பது உறுதி செய்யப்படுகின்றது.

இந்த மனம் ஆத்மாவை மறைத்துக் கொண்டு, ஆனந்தத்தை நாடுகின்றது. 

இது எவ்விதம் ஆத்மாவை மறைக்கின்றது எனில், பிரகாசமான சூரியனை, மேகம் மறைப்பது போன்று காணப்படுவதைக் கண்டு, மேகம் சூரியனை விட பெரியது என்று கூறிவிட முடியாது. அதுப்போல, மனம் ஆத்மாவை மறைப்பதைக் கண்டு, அதைவிட பெரியது என்று தவறாக நினைத்துக் கொள்ளக்கூடாது.

அனைத்து நினைவுகளுக்கும் மனமே காரணம். நாம் ஏற்கனவே அறிந்து கொண்டதுபோன்று, விழிப்பு நிலை, கனவு நிலை ஆகிய இரண்டுமே, நம் மனதின், எண்ணங்களின் விருத்தியே. 

நாம் காணும் கனவுகளுக்கு ஏதேனும் அர்த்தங்களோ, பின் விளைவுகளோ, பலன்களோ இருக்கின்றதா எனப் பார்த்தால், ஒன்றுமில்லை என்றே தெரிகின்றது. 

கனவில் நாம் காணும் உலகங்கள் யாவற்றையும், மனமே படைக்கின்றது. கனவு காணும் போது, அந்த உலகமும், அதில் வரும் உருவங்களும், அதில் நிகழும் நிகழ்ச்சிகளும், நமக்கு நிஜம் போலவே இருக்கின்றன. 

விழித்து எழுந்ததுமே, அவை ஏதும் நிஜமல்ல எனத் தெளிவாகின்றது. (கனவு காணும் தருணத்தில், அது கனவு என நாம் அறிவதில்லை. விழித்து, புற உலகை அறிந்தவுடன், அதுவரை நாம் கண்டதெல்லாம் கனவு என அறிகின்றோம்).

இதைப் போலவே, விழிப்பு நிலையில் நாம் காணும் உலகக்காட்சிகள் அனைத்துமே மனதாலேயே தோற்றுவிக்கப்படுகின்றது. இவைகள் யாவும் மனதின் விருத்திகளே ஆகும். 

கனவு நிலை அனுபவங்களை, கனவு கலைந்து விழித்தவுடன் மற்றவர்களிடம் பகிர்ந்துக் கொள்வதைப் போன்று, விழிப்பு நிலை அனுபவங்களை மரணத்திற்கு பிறகு யாருடனும் பகிர்ந்துக் கொள்ள முடியாது. 

ஆனால், மனம் தன்னுடைய விழிப்பு நிலை அனுபவங்களின் பதிவுகளுக்கு ஏற்ப சேகரித்துக் கொண்ட ஆகாமிய கர்மாவை, கொண்டு சென்று, சஞ்சித கர்மாவுடன் இணைத்துக் கொண்டு, ஏற்கனவே, அதில் சேகரிக்கப்பட்ட ஒட்டுமொத்த சம்ஸ்காரங்களுக்கு ஏற்ப, அவைகளில் இருந்து சிறிது மட்டும் பிராரப்த கர்மாவாக எடுத்துக் கொண்டு, அவைகளை அனுபவிக்கும் பொருட்டு, அதற்குத்தக்க உடலை மீண்டும்  தேர்ந்தெடுத்து பிறவிக்கு வருகின்றது. 

இது ‘மனம் செய்யும் செயல்’ என்பதை ஒருவன் இந்த மனதைக்கொண்டு, புத்தியினால் விசாரித்து அறிய வேண்டும்.

தொடரும்…🙏பராவித்யா Swami Prabanjanathan

தன்னை அறியும் மனம்
=====================

(பகுதி - 8)
---------------

மனமானது சங்கல்பங்கள் மற்றும் விகல்பங்கள் ஆகியவைகளின் தன்மையாகும். 

இதில், சங்கல்பம் எனில் எண்ணுதல், சிந்தித்தல் எனப்படும். விகல்பம் எனில் சந்தேகப்படுதல், ஐயப்படுதல் எனப்படும்.

அந்தகரணத்தின் மாறுதல்கள் ஒரு விசயத்தைக் குறித்து, அல்லது ஒரு செயலைக் குறித்து, சிந்திப்பதும், சந்தேகப்படுவதும் எழும் போது அதனை “மனம்” என்று அழைக்கின்றோம்.

இவ்வாறு, இந்த மனதின் விருத்திகளை விழிப்பு, கனவு, மற்றும் ஆழ்ந்த உறக்கம் என்ற மூன்று அவஸ்தைகளில், நாம் மூன்று உடல்களின் வாயிலாக அனுபவிக்கின்றோம். 

அது எப்படி?

அதாவது, ஜீவர்களின் உடல்களை சாஸ்திரம் மூன்று விதங்களில் விவரிக்கின்றது. 

அவைகள், ஸ்தூல உடல், சூக்ஷும உடல், காரண உடல் என்பனவாகும்.

ஸ்தூல உடல்
============

மனிதனின் ஸ்தூல உடல் ஆகாயம், வாயு, அக்கினி, நீர், பூமி எனும் பஞ்சபூதங்களால் ஆனது. இந்த பரு உடலானது ஆறுவிதமான மாற்றங்களுக்கு உட்பட்டது.

அவைகள்,

1. கருவில் இடம் பெறுதல் (அஸ்தி), 
2. பி்றத்தல் (ஜாயதே),
3. வளர்தல் (வர்ததே), 
4. இளமை, வாலிபம், முதுமை போன்ற மாறுபாடுகளுக்கு உட்படுதல் (விபரிணமதே),
5. மூப்பின் காரணமாக தளர்ச்சி அடைதல் (அபச்சியதே),
6. இறுதியில் மரணமடைதல் (நாசம்). 

எனும் ஆறு மாற்றங்களுக்கு (ஷட் விகாரம்) இந்த ஸ்தூல உடல் உள்ளாகின்றது. 

சூக்ஷும உடல்
=============

மனிதனின் சூக்ஷும உடல், கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகிய ஐந்து ஞானேந்திரியங்கள், வாய், கை, கால், குதம், குறி ஆகிய ஐந்து கர்மேந்திரியங்கள், பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன் ஆகிய பஞ்ச பிராணன்கள் மற்றும், மனம் ஆகிய 16 நுண் உடல்களைக் கொண்டது. இந்த சூக்ஷும உடல் பிரளய காலம் வரை வாழ்நாள் கொண்டது.

காரண உடல்
============

இவ்விரண்டு உடல்களுடன் ஜீவனுக்கு காரண உடலும் (காரண சரீரம்) உண்டு. 

இவ்வுடல் தனி உடல் அல்ல. 

ஸ்தூல, சூக்ஷும உடல்கள் வெளிப்படும் முன் இருக்கின்ற விதை எனலாம். எவ்வாறு விதை, மரமாக வெளிப்படுகிறதோ அவ்வாறே காரண உடல், சூக்ஷும உடலாகவும், ஸ்தூல உடலாகவும் வெளிப்படுகிறது. 

பிரளய காலத்தில் சூக்ஷும உடலும், ஸ்தூல உடலும் காரண உடலுடன் ஒடுங்கிவிடுகின்றன. 

ஸ்தூல உடல் - விழிப்பு - பரு உடல் 
சூக்ஷும உடல் - கனவு - மனம் 
காரண உடல் - ஆழ்ந்த உறக்கம் - அறியாமை.

இதில், இதுவரை இந்த விழிப்பு நிலையில், நம்முடைய பௌதீகமான ஸ்தூல உடலினால், நாம் பெற்ற அனுபவங்கள் யாவும் ஒரு விதையாக மாறி, வெளிப்படாமல் (அவ்யக்தமாக) ஒரு இடத்தில் ஒடுங்குகின்றன. அவைகள் ஒடுங்கும் இடமே “காரண உடல்” எனப்படுகின்றது.

அதுபோன்றே, கனவு நிலையில் (மனதினால்) சூக்ஷம உடலினால், நாம் பெற்ற அனுபவங்கள் யாவும் ஒரு விதைப் போன்று, வெளிப்படாமல் ஒடுங்குகின்றன. இவ்வாறு, இவைகள் ஒடுங்கும் இடமும் அதே “காரண உடல்” எனலாம்.

நாம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழிப்பு நிலைக்கு வரும் போது, நாம் காரண உடலை விடுத்து, ஸ்தூல உடலை அபிமானிக்கின்றோம். 

இதுவரை, காரண உடலில் வெளிப்படாமல், விதைகளாக ஒடுங்கியிருந்த அனுபவங்கள் யாவும், விழிப்பு நிலையில் ஸ்தூல உடலின் வாயிலாக வெளிப்படுகின்றன. 

அவ்வாறே, நாம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து கனவு நிலையை அடையும் போது, காரண உடலை விடுத்து, சூக்ஷம உடலான மனதை அபிமானிக் கின்றோம். 

இவ்வாறு, கனவிலும், நனவிலும் உண்டாகும் அனுபவங்கள் யாவும், ஏற்கனவே காரண உடலில் விதைகளாக ஒடுங்கி இருந்தவைகளே ஆகும்.

இது எப்படி எனில், ஒரு கடுகு அளவுள்ள சிறிய விதைக்குள் மிகப்பெரிய மரம் ஒடுங்கி, ஒளிந்துக் கொண்டிருப்பது போன்று, காரண உடலில் இந்த மனதின் சம்ஸ்காரங்கள் அனைத்தும் ஒடுங்கியுள்ளது.

இதனாலேயே, உறக்கத்திலிருந்து விழித்தவுடன், உறங்குவதற்கு முன் நின்ற நினைவுகள் யாவும், மீண்டும் விட்ட இடத்திலிருந்தே தொடர்கின்றன. பல நேரங்களில், கனவு அனுபவங்கள் விழித்த பின்னும், நினைவில் இருக்கின்றன.

நாம், எப்பொழுதெல்லாம், காரண சரீரத்துடன் சம்பந்தப்பட்டு இருக்கின்றோமோ, அப்பொழுதெல்லாம், எவ்வித புற அனுபவமும் இன்றி, ஏதும் அறியாத நிலையில் (ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போல) இருக்கின்றோம்.

இந்த நிலை ‘அறியாமை நிலை’ அல்லது ‘அவித்யை நிலை’ எனப்படும். 

ஏன் இதை அறியாமை நிலை என்று கூறப்படுகின்றது என்றால், அங்கு ‘நான் யார்?’ என்று தன்னை அறியக்கூடிய ‘அறிவை’ நாம் உணர்வதில்லை. காரணம், அங்கு மனம், புத்தி இல்லை.

ஆழ்ந்த உறக்கத்தில் அடைந்த ஆனந்த அனுபவத்தை, நாம் விழிப்பு நிலையில் மனதையும், புத்தியையும் கொண்டு மட்டுமே அறிகின்றோம்.

ஆக மனமும், புத்தியும் இல்லாவிட்டால், அங்கு ஆனந்தம் இருந்தும், அதை அனுபவப்பட முடியாமல் இருப்பதை அறிகின்றோம்.

இவ்வாறு, உண்டாகும் ஆனந்தம் நமக்கு அனுபவப்பட வேண்டுமானால், மனம் என்ற அந்தக்கரணம் அவசியம் என்று இருக்கும்பொழுது, பிறகு ஏன் பரம புருஷர்கள் மனதை இறக்க வேண்டும், அல்லது இல்லாமல் செய்ய வேண்டும் என்றும், மனமற்ற நிர்விகல்ப நிலை உண்டாக வேண்டும் என்றும் பலவாறாக உபதேசிக்கின்றார்கள் என்றால், மனம் என்பது ஆத்மாவில் இருந்து வேறுபட்டதல்ல என்பதினால், அதன் அதீத வளர்ச்சியினால் உண்டான புத்தி சக்தியைக் கொண்டு, அது தன்னை அறிந்து, தன் தனித்துவத்தை முற்றிலுமாக இழந்து, தன்னுடைய இயல்பான சொரூபத்தில் ஆ(பரமா)த்மாவில் கரைந்து விடுகின்ற அதிசூக்ஷுமத்தை அறிய வேண்டும் என்பதினால் ஆகும்.

தொடரும்... 🙏பராவித்யாSwami Prabanjanathan


தன்னை அறியும் மனம்
=====================

(பகுதி - 9)
---------------

பொதுவாக, மனம் இரண்டு விதமாகவே செயல்பட்டு, இரண்டு விதமான அனுபவங்களுக்கு உட்படுகின்றது. 

அவைகள், உயர்வு - தாழ்வு, நல்லது - கெட்டது, இன்பம் - துன்பம், பிறப்பு - இறப்பு, பயம் - தைரியம், பாவம் - புண்ணியம், இருள் - வெளிச்சம் ஏழை - பணக்காரன், நோய் - ஆரோக்கியம், வெண்மை - கருமை, சூடு - குளிர்ச்சி, ஆண் - பெண், ஆஸ்திகன் - நாஸ்திகன், என்று எட்டாத உயரத்திற்கு அடுக்கிக் கொண்டே போகக்கூடிய பல்வேறு இருமைகளை கற்பித்துக் கொண்டுள்ளது இந்த மனம்.

அதன் அடிப்படையிலேயே இந்த மனமானது எதை தேடினாலும், அந்த தேடுதலில் இரண்டுவிதம் உண்டு. ஒன்று இந்த உலகப்பொருளிடம் இன்பத்தை தேடி ஓடுவது. அல்லது, பரம்பொருளிடம் இன்பத்தை தேடி ஓடுவது.

இந்த இரு நிலைகளுக்கும் மனம் மாறி, மாறி இருந்துக் கொண்டுதான் இருக்கும். அது மனதின் இயல்பு என்றாலும், இயற்கையின் நியதியும் அவ்வாறே அமைக்கப்பட்டுள்ளது.

 அது எவ்வாறு எனில், ‘ஆக்கம் என்று ஒன்று இருந்தால் அழிவு என்ற ஒன்றும் நிச்சயம் இருந்தாக வேண்டும். இதுவே, படைப்பின் நியதி. இந்த இருமை நியதிக்கு படைக்கப்பட்ட மனமும் விதி விலக்கல்ல.’ 

உதாரணமாக, ஒரு அணுவின் இயக்கத்திற்கு புரோட்டான் என்ற ஒரு நேர்மறை(+ve) மூலக்கூறும், எலக்ட்ரான் என்ற ஒரு எதிர்மறை(-ve) மூலக்கூறும்  ஒன்றை ஒன்று ஈர்த்துக்கொண்டு, அதன் நிலையான இயக்கத்திற்கு காரணமாக அமைகின்றது. 

அதுப்போன்றே, நேர்மறை(+ve) மற்றும் எதிர்மறை(-ve) கொண்ட இரண்டு இணைப்புகளும் (Terminals) இருந்தால்தான் மின்கலன் (Battery) செயல்படுகின்றது.

இவ்வாறே, ஏற்றத்தாழ்வுகள் என்ற இருமைகள் இருந்தால்தான் இந்த உலகமும் செயல்படும். 

ஏனெனில், இல்லாத உலகம் இந்த இருமைகளினால்தான் இருக்கின்றது. 

“இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.” - திருக்குறள்.

இருமைகளை ஆராய்ந்து, அதன் நியதியை (தர்மத்தை) அப்படியே ஏற்றுக் கொண்டவர்களின் பெருமையால் இந்த உலகம் விளங்குகின்றது. என்பது இந்த குறளின் கருத்து.

ஆகவே, “இருமைகளைக் கொண்ட மனம் இருக்கின்றவரை, இந்த உலகம் இருக்கும்.” 

மனம் இருமைகளைக் கொண்டதினால்தான் ஒன்றேயான சிவத்திடம் இருந்து தன்னை வேறுபடுத்திக் கொண்டு, சீவன் என்று இறைவனை இருமைப்படுத்திக் கொள்கின்றது.

இந்த சீவன் அறியாமையினால் தன் உண்மை சொரூபத்தை மறந்து, ஆத்மாவின் மீது, அனேக சீவ உபாதிகளை ஏற்றிவைத்துக் கொள்கின்றது.

(உபாதி என்பது ஒன்றின் மீது மற்றொன்றை ஏற்றி வைத்தல் என்பதாகும். உதாரணம் கண்ணாடி போன்று கலங்கமில்லாத ஸ்படிகத்தின் அருகே வைக்கப்பட்ட ரோஜா மலரின் சிவந்த நிறம் அந்த ஸ்படிகத்தின் மீது ஏற்றி வைக்கப்பட்டு, பார்பதற்கு அந்த ஸ்படிகம் சிவந்த நிறத்தில் காணப்படும்.

அதுபோன்று, கலங்கமற்ற பரம்பொருளான ஆ(பரமா)த்மா - வின் மீது மனம் என்பதை ஏற்றி வைத்துக்கொண்டு, அதன் இருமைகள் அனைத்தும் ஆத்மாவாகிய தன்னிடம் இருப்பதாக கருதிக்கொண்டு, சீவன் தன்னை அறியாமல் இருக்கின்றது.)

உதாரணமாக, ‘நீர்’ என்பது ஒன்றுதான். அதாவது, ஐம்பெரும் பூங்களில் ஒன்று. 

அதுவே, கடல் நீர், நிலத்தடி நீர், குளத்து நீர், கிணற்று நீர், ஆற்று நீர், சேற்று நீர், மழை நீர், ஒடை நீர், அருவி நீர் என பலவாறாக, இடத்திற்கு ஏற்பப் பெயர் பெறுகின்றது. இந்த நீர்நிலைகளில் எல்லாம் அது தன் இயல்பான திரவ நிலையில் உள்ளது. 

பின்பு அதுவே காற்றுப் போன்று, பலவாறாக இருப்பதும் உண்டு. நீர் ஆவி, நிறமில்லாத ஆவி, வெண்மேகம், செம்மேகம், கார்மேகம், மூடுபனி, நீர்ப்பணி ஆகிய பல வடிவங்களில் காணப்படுகின்றது.

 மேலும், அது கடும் குளிரால் கடினபதார்த்தமாக மாறிவிடுவதும் உண்டு. அவைகள், உறைபனி, ஆலங்கட்டி, ஐஸ்கட்டி என்ற நிலையில் பலவாறாக வடிவம் பெறுகின்றது.

இத்தனை விதமான வடிவங்களும், அதன் நிலைகளும் ஒன்றேயான நீரின் உபாதிகளாகும்.

இத்தனை வேறுபாடுகளுக்கிடையில் நீர் தனது உண்மையான நீர்மையை இழப்பதில்லை. 

கங்கை நீர் என்பது நீரின் ஒரு மேலான உபாதி என்றால், சாக்கடை நீர் என்பது அதன் கீழான உபாதி எனலாம். 

கீழ்நிலையை முன்னிட்டு, சாக்கடை நீரை இழிவானது எனல் ஆகாது. ஏனென்றால், அதன் கீழ்நிலையும் தேவையானதே. 

இதுபோன்று, நீரின் உபாதிக்கு நிகரானது சீவாத்மாவின் உபாதி. 

இந்த சீவன் கல்லாகவும், புல்லாகவும், புழுவாகவும், பூச்சியாகவும், பாம்பாகவும், பறவையாகவும், விலங்காகவும், மனிதனாகவும் என பல்வேறு சீவ உபாதிகளில் உருவெடுக்கின்றது.

நீர் எப்படி ஒரே சமயத்தில் நீராவியாகவும், உறைபனியாகவும் இருப்பதில்லையோ, அதுபோன்றே, சீவனும், ஒரே சமயத்தில் கல்லாகவும், புல்லாகவும் இருப்பதில்லை.

இந்த உபாதிகள் மாறி, மாறி அமையக்கூடிய தன்மை கொண்டது என்பதை நாம் நாள்தோறும் கனவு காணும்பொழுது, கண்டுகொள்கின்றோம். ஆகவே, கனவே நமக்கு உண்மையை அறிய நிதர்சனமான அனுபவம் எனலாம்.

இது எவ்வாறு எனில், கனவு காண்கின்ற மனம், கனவில் பல்வேறு உபாதிகளில் உடல் எடுத்துக் கொண்டு, அத்தனை உடல்களையும் தன்னில் தானாய் இருந்துக்கொண்டு அனுபவிக்கின்றது.

அதாவது, ஒரு உலகை படைத்து, அந்த உலகத்தில் பல்வேறு உடல்களைப் படைத்து, அதில் ஒரு புலி துறத்துவது போன்றும், அந்த புலிக்கு பயந்துக்கொண்டு இவன் ஓடிவருவது போன்றும் ஒரே மனம் பலவாக கனவு நிலையில் பரிணமிக்கின்றது.

இதையே, நம்முடைய விழிப்பு நிலை அனுபவத்திலும் மனம் இவ்வாறு இந்த உலகத்தை படைத்துக் கொண்டு, அதில் பல்வேறு தரப்பட்ட மக்களையும், மிருகங்களையும், பறவைகளையும், ஜடப்பொருட்களையும் என உபாதிகளை உற்பத்தி செய்து கொண்டே இருக்கின்றது.

இதே மனம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் பொழுது விலங்கு, பறவை, மனிதன், ஜடப்பொருட்கள் என அனைத்திலும் எந்தவிதமான வேறுபாடுகளும் இன்றி, ஒன்றாகமாறி, தன் இயல்பான சொரூபத்தில் காரண உடலில் ஒடுங்கி விடுகின்றது.

எப்பொழுதெல்லாம் மனம் காரண உடலை விட்டு, (தன் சொரூபத்தை விட்டு) வெளிக் கிளம்புகின்றதோ, அப்பொழுதெல்லாம் தனக்கு வேறாக பல்வேறு உபாதிகளை (உடல்களை) படைத்துக் கொண்டு பல்வேறு வேறுபாடுகளை கற்பித்துக் கொள்கின்றது.

இந்த கண்ணிற்குத் தெரிகின்ற ஸ்தூல உடலுக்கும், இந்த ஸ்தூல உடலைக் கொண்டு செயல் செய்கின்ற புற, அகக்கரணங்களுக்கு ஆதாரமான கண்ணிற்குத் தெரியாத சூக்ஷும உடலுக்கும், காரணமாக இருக்கின்ற ‘காரண உடலே’ மனதின் இருப்பிடம் ஆகும். 

தொடரும்... 🙏பராவித்யா SwaminPrabanjanatha

தன்னை அறியும் மனம்
=====================

(பகுதி - 10)
----------------

அதாவது, ஒருவன் இங்கும், அங்கும் ஆடி, ஓடி பலகாரியங்களைச் செய்து களைப்பின் மிகுதியால், தன் இருப்பிடமான வீட்டிற்கு வந்து சேர்ந்து, ‘அப்பாடா’ என்று ஓய்வு எடுக்கும் பொழுதுதான் ஆனந்தத்தை உணர்கின்றான். ஆனால், அந்த ஆனந்தம் அவனுக்கு தற்காலிகமானதே.

ஜீவர்கள் தினமும் எப்படி பகல் பொழுதில் பலவாறு இங்கும், அங்கும் உணவுக்காக சுற்றி அலைந்து விட்டு, இறுதியில் தங்களுக்கு என்று ஏற்படுத்திக்கொண்ட இருப்பிடங்களான வீடுகளுக்கும், கூடுகளுக்கும் இரவில் வந்து ஒடுங்குகின்றனவோ அதுப்போன்று, இந்த மனமும் பலவாறு எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு, களைப்பின் காரணமாக தன் இருப்பிடமான காரண உடலுக்கு தினந்தோறும் ஆழ்ந்த உறக்கத்தில் தாமஸ குணத்தில் வந்து ஒடுங்குகின்றது. 

இவ்வாறு, மனம் வெளிப்பட முடியாமல் விதை வடிவில் ஒடுங்கி இருக்கும்வரை மட்டுமே சிறிது ஆனந்தம் நிலைக்கின்றது. 

 அவ்வாறு, ஆழ்ந்த உறக்கத்தில் மனம் ஒடுங்கும் பொழுது உண்டாகும் ஆனந்தத்தை அப்பொழுதே அனுபவப்படுவதற்கு முடியாமல் இருக்கக் காரணம், அதே காரண உடலில் மனம் சேகரித்துக் வைத்துக்கொண்டுள்ள சம்ஸ்காரங்களான பாவம் - புண்ணியம் என்ற பல்வேறு இருமைகளினால் சூழப்பட்டு இருப்பதினால், அங்கு ‘சித் சக்தி’ (தன்னை அறியும் அறிவு) பிரகாசிப்பதில்லை.

அதுவே, மனம் விழித்தவுடன் விழிப்பு நிலை அனுபவத்தில் சத்வ குணத்திற்கு வந்து உறக்கத்தில் உண்டான ஆனந்தத்தை இங்கு உணர்வதற்கு மனதுடன் புத்தி சக்தியும் சேர்ந்து உள்ளது. 

காரண உடலில் தாமஸ குணத்தில் மனம் ஒடுங்கும் பொழுது, வந்து, போகின்ற ஆனந்த அனுபவம், விழிப்பு நிலையில் ராஜஸ குணத்தில் மனம் ஒடுங்கும் பொழுது வந்து போகின்றது. 

அது எவ்வாறு எனில், விழிப்பு நிலையில் நாம் நம் கண்கள் என்ற புலன்களைக் கொண்டு ஒரு பொருளை பார்த்து, அதன் மீது மனதினால் ஆசை கொண்டு, அதை அடைய வேண்டும் என்று விரும்புகின்றோம். அதை அடைய வேண்டும் என்ற ஆசையே சிறுது ஆனந்தத்தை உண்டாக்குகின்றது 

அதுவே, ஆசைப்பட்ட அந்தப் பொருளை நாம் அடைந்து விட்டாலோ, மனம் இன்னும் பூரித்து கூடுதலான ஆனந்தத்தை அடைகின்றது. 

அடுத்து, அடைந்த அந்தப்பொருளை நாம் அனுபவிக்கும் பொழுது, மனதில் உண்டாகின்ற ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. அது ஒன்றே மனதை முழுமையான திருப்தி நிலைக்கு கொண்டு சென்று விடுகின்றது. ஆனால், இந்த திருப்தி என்பது மனதிற்கு அடுத்த ஆசையை உண்டாக்கக்கூடிய எண்ணங்கள் தோன்றாமல் இருக்கும் வரை மட்டுமே. 

இதுபோன்ற அனந்தம் உண்டாகும் பொழுது எல்லாம், மனம் காரண உடலை அபிமானித்து இருக்கின்றது. ஆனால், வருகின்ற ஆனந்தம் சிறிது நேரத்திலேயே நீர்த்து விடுகின்றது. மனம் மீண்டும் மற்றொன்றின் மீது ஆசைப்படுகின்றது. இது மனதின் தொடர் நிகழ்வாக காணப்படுகின்றது.

இவ்வாறு, உறக்கத்தில் அடையும் ஆனந்தத்தை, விழிப்பு நிலையில் மனம் புத்தி சக்தியின் வாயிலாக அறிந்துக் கொண்டாலும், அந்த ஆனந்தம் நிலையாக நீடிக்க முடியாமல் இருப்பதற்குக் காரணம், விழிப்பு நிலை அனுபவங்கள் ராஜஸ குணத்தை பிரதானமாக கொண்டுள்ளதால், அந்த குணத்திற்கு ஏற்ப, மனம் நிலைகொள்ளாமல் காரண உடலுடன் முழுமையாக ஒடுங்க மறுக்கின்றது.

மனம் முழுமையாக காரண உடலில் ஆழ்ந்த உறக்கத்தில் தாமஸ குணத்தில் ஒடுங்குவது போன்று, விழிப்பு நிலையில் சத்வ குணத்திலும் மனம் இருமைகளற்று, எந்த எண்ணங்களும் இன்றி, யோகத்தில் ஈடுபட்டு, அந்த ஏக இறைவனை பக்தி செய்து அவனுடன் இரண்டறக் கலக்கும் பொழுதும், அல்லது, போகத்தில் ஈடுபட்டு, தன் மனைவியுடன் உடல், மனம் என்ற இருமைகளற்று இரண்டறக் கலக்கும் பொழுதும் மனம் ஒடுங்குகின்றது. ஆனால், இந்த இரண்டு விதமான ஆனந்தமும் நிலையாக நீடிக்காததற்குக் காரணம் மனம் காரண உடலில் ஒடுங்குவதினால்தான்.

இதிலிருந்து, மனம் இருமைகள் இன்றி ஒரே முனைப்பாக எதை நோக்கி ஒடுங்குகின்றதோ, அப்பொழுது, அங்கே ஒருமை நிலை உண்டாகி, தன் சொரூபத்தில் நிற்கின்றது. அப்பொழுது, முழுமையான திருப்தியை, ஆனந்தமாக சற்று நேரம் அடைகின்றது என்பதை அறிய முடிகின்றது. 

மனம் தன் சுய சொரூமான ஆ(பரமா)த்மாவை எப்பொழுது உணர்கின்றதோ, அப்பொழுது எல்லாம் ஆனந்தம் உண்டாகின்றது.

பிறகு ஏன்? மனம் ஆத்மாவை உணராமல், காரண உடலை அபிமானிக்கின்றது என்றால், அந்த மனதின் பல்வேறு சேகரிப்பினால் உண்டான சம்ஸ்காரங்கள் அனைத்தும் அந்த காரண உடலில் கொண்டுள்ளதால், தன் இருப்பிடமான காரண உடலுக்கு சென்று ஒடுங்குகின்றது.

காரண உடல் என்பது, ஸ்தூல, சூக்ஷும உடல்களினால் சேகரிக்கப்பட்ட அனுபவங்களான பல்வேறு சம்ஸ்காரங்களின் ஒட்டு மொத்த தொகுப்பு. இத்துடன், இருமைகளால் சூழப்பட்ட, பல்வேறு பிறவிகளாக சேகரிக்கப்பட்ட சஞ்சித கர்மம் என்ற புண்ணிய - பாவங்களை கொண்ட ஒரு சேமிப்புக் கிடங்கு. 

உண்மையில், காரண உடலில் நடப்பது என்ன? என்று ஆராய்ந்தால், மனம் விதையாக காரண உடலில் ஒடுங்கும் பொழுது, அதன் சுயப்பிரகாச சொரூபமாகிய ஆத்மா வெளிப்படுகின்றது.

ஆகவே, மனம் ஆத்மாவுடன் ஒன்றாகி ஒடுங்கும் போது மட்டுமே ஆனந்தம் உண்டாகின்றது. அது தன் பழைய நிலையான விதை வடிவத்தில் தற்காலிகமாக காரண உடலில் ஒடுங்குகின்றதே தவிர, அங்கு மனம் முழுவதுமாக ஆத்மாவில் அடைக்கலம் ஆகவில்லை.

மேலும், மனதின் அத்தனை இருமைகளும் புண்ணிய - பாவங்களாக புதைந்துக்கொண்டுள்ள ஒரே இடம் இந்த காரண உடல் என்பதினால், இந்த காரண உடல் அழியாமல், சூக்ஷும உடலான மனமும் அழியாது. 

மனம் அழியாமல் இருந்தால், அது மீண்டும், மீண்டும் உடல் எடுத்துக் கொண்டு பிறவிக்கு வருவதை தடுக்கவே இயலாது.

இந்த காரண உடல் அழியும் பொழுதுதான், மற்ற இரண்டு உடல்களான சூக்ஷும உடல் (மனம்), ஸ்தூல உடல் (பூத உடல்) இரண்டும் உண்டாகாமல் தடுக்கப்படுகின்றது.

அதுவரை இந்த மனம் மீண்டும், மீண்டும் தன்னிடம் சேகரித்து வைத்துள்ள சம்ஸ்காரங்களுக்கு ஏற்ப உடல்களை எடுத்துக்கொண்டே இருக்கும். பல பிறவிகளுக்கு வந்து, போய்க்கொண்டே இருக்கும்.

 பிறப்பு - இறப்பு என்ற சுழற்சக்கரத்தை நிறுத்த வேண்டும் என்றால், இந்த மனதை விசாரித்து, தன் சுய சொரூபத்தை அறிந்து, அந்த ஆ(பரமா)த்மாவில் இரண்டறக் கரைந்து விடவேண்டும். அதாவது, உப்புக்கட்டி கடல் நீரில் கரைந்து விடுவது போன்று ஒன்றாக கரைந்து விட வேண்டும். இதைத்தவிர வேறு வழியே இந்த மனதிற்கு கிடையாது.

ஆகவே, மனதைக் கொண்ட சீவர்களில் மனிதனுக்கு மட்டுமே இது சாத்தியம். மற்ற சீவர்களுக்கு இதுவும் சாத்தியமல்ல. காரணம், உயர் பிறப்பான மனிதனே தனக்கு கொடுக்கப்பட்ட புத்தி சக்தியினால் ‘அறிவை அறிவினால் விசாரித்து’ ஆ(பரமா)த்மாவை அறிய முடியும்.

ஆதலால், இந்த மனம் இத்தகைய அரிதான மனித உடலை எடுக்கும் பொழுதே, இந்த சந்தர்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மனதை சரியாகக் கையாளும் பக்குவிகளும், மனதை செம்மை செய்கின்ற செயற்கரிய செயலைச் செய்பவர்களுமாகிய, அனேக மகா புருஷர்களில் நாமும் ஒருவராக நிச்சயம் இருக்க வேண்டும். 

அதுவே, நமக்கு கிடைத்த அரிதிலும், அரிதான மனிதப்பிறவியின் பயன் என்னவெனில், நம் உண்மையான சொந்த வீட்டிற்கு (வீடுபேறு)  நாம் சென்று, நிலையான ஆனந்தத்தை அடைவது ஒன்றே ஆகும். 

இதுவே, சனதான தர்மம் வகுத்துள்ள “அறம், பொருள், இனபம், வீடு” என்ற மனிதனுக்கு மட்டுமே உண்டான வாழ்வியல் வழிமுறையாகும்.

மனதை செம்மை செய்வது என்பது, அந்த செம்பொருளை எப்பொழுதும் சிந்தித்தவாறு அன்பு (பக்தி) செய்வதாகும். அதாவது, மனதால் அந்த மெய்ப்பொருளை விசாரித்து, அதனிடம் முழுமையாக சரணடைந்து, மனதை ஒப்படைப்பது ஆகும். 

“பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு. - திருக்குறள்.

பிறப்பு என்ற (மனதின்) அறியாமை நீங்க வேண்டுமென்றால், சிறப்பான மெய்ப்பொருளை கண்டு கொள்வதே அறிவு. என்று வள்ளுவப்பெருமானார் அறிவுறுத்துகின்றார்.

அதுப்போலவே, மனமற்ற நிலை, மனம் இறந்த நிலை என்பதுவும், மனதைக் கொண்டு, புத்தியினாலே அந்த மெய்ப்பொருளை விசாரித்து, அதற்கு வேறாக எப்பொருளும் இல்லை, இருக்கின்ற மெய்ப்பொருளாக அது ஒன்றே எல்லை. என்பதை அறிந்துகொண்டு, இந்த உடலுடன் வாழும்பொழுதே அதனுடன் இரண்டறக் கலந்து, ஒன்றாகி விடுவதே ‘ஜீவன் முக்தி’ என்றும், ‘ஞானம்’ (விவேகம்) என்றும் அழைக்கப்படுகின்றது.

இதிலும், நம்முடைய மனம் உடனடியாக அது பக்தி, இது ஞானம் என்று அறியாமையினால் வேற்றுமைகளை உண்டாக்கிக்கொண்டு இருமைகளை தோற்றுவித்துக் கொள்ள முயற்சிக்கும். 

ஆகவே, இருமைகள் அகன்று, இறைவனுடன் இரண்டறக் கலந்து, ஒன்றென அறியும் மனமே, உண்மையில் மெய்ப்பொருளை (அறிவை) உணர்ந்த மனம் எனப்படுகின்றது. 

அந்த மனமே தன் உண்மை சொரூபத்தை அறிந்து ஆ(பரமா)த்மாவில் நிலை பெறுகின்றது. அந்த நிலையில் மட்டுமே நிலையான ஆனந்தம் எப்பொழுதும் நிலைத்திருக்கின்றது. 

ஏனெனில், இனி மனம் என்று ஒன்று தனியாக இல்லை, ‘இருப்பதெல்லாம் இறைவனே’ ஆகும்.

தொடரும்... 🙏பராவித்யா Swami Prabanjanathan


தன்னை அறியும் மனம்
=====================

(பகுதி - 11)
----------------

பொதுவாக, மனமற்ற நிலை என்பது முக்குணங்களுக்கும் அப்பாற்பட்டது. அங்கு, கால, தேசம் கிடையாது. அந்நிலையில் மனம் என்ற மாயை மாண்டு விடுகின்றது. 

அதாவது, கடலை ஆழம்பார்க்கச் சென்ற உப்பு பொம்மை, அந்த கடல் நீரிலேயே கரைந்து விடுவது போன்று, சீவன் தன் வடிவத்தை இழந்து சிவம் என ஒன்றாகி விடுகின்றது.

இதுபோன்று, மனம் அந்த இறைவனுடன் இரண்டறக் கலந்துவிட்டால், அதற்கு தனியாக இருப்பு என்று இல்லாமல் போய் விடுகின்றது.

இதையே, நாம் மனம் அற்ற நிலை, அல்லது மனம் இறந்த நிலை என்கின்றோம்.

மற்றபடி, மற்றவர்கள் நினைத்துக்கொண்டிருப்பது போன்று, மனதைக் கொல்வது அல்லது அழிப்பது என்பது சாத்தியம் இல்லை. 

எண்ணங்களே தோன்றாமல் ‘கோமா’ நிலையில் இருக்கவும் முடியாது. 

எண்ணங்கள் அற்ற நிர்விகல்ப சமாதியில் சில காலம் இருக்கலாம் என்றாலும், சமாதி கலைந்து, விழிப்பு நிலைக்கு வந்தவுடன், மனதின் பழைய சம்ஸ்காரங்களுக்கு ஏற்ப, அதனுடன் சம்பந்தம் உண்டாகி, இந்த உலகம் மீண்டும் பழையபடி வந்து அப்படியே ஒட்டிக்கொள்கின்றது.

மேலும், எண்ணங்கள் இன்றியும், எதிலும் பற்று இன்றியும் மனம் இருக்க முடியாது. ஆனால், மனம் பற்ற வேண்டியதை பற்றினால், பற்று விட்டுப் போகும். 

இதையே, வள்ளுவப்பெருந்தகை கீழ்க்கண்ட குறட்பாவில்,

“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.”-  திருக்குறள்.

யாதொரு பற்றும் இல்லாத இறைவனைப் பற்றிக் கொண்டால், இந்த மனம் பற்றினை விட்டு விலகுதற்கு ஏதுவாக இருக்கும் என்கின்றார்.

ஆகவே, மனம் என்ற கருவியைக் கொண்டு மகத்தான பரம்பொருளை மட்டுமே பற்ற வேண்டும். அற்பமான உலகப்பொருளை பற்றுவதை விட்டு விலக வேண்டும்.

அதனால், மனதை நன்றாக அறிந்துக் கொண்டவன், அந்த மனதைக் கொண்டு, அற்ப பொருள்களைப் பற்றாமல், பரம்பொருளை மட்டும் பற்றிக்கொண்டு, அதையே எப்பொழுதும் எண்ணிக் கொண்டு இருப்பதினால், அதனுடன் இரண்டறக் கலந்து விடுகின்றான். 

அவனே ‘சீவன் முக்தன்’. அவன் இந்த உடலுடன் வாழும் பொழுதே இந்த உடல் பற்றுமின்றி இருக்கின்றான் அதனால், அவனே ‘விதேக முக்தன்’ எனவும் அழைக்கப்படுகின்றான்.

உடலை விட்ட பிறகு அடைகின்ற விதேக முக்தியை விட, உடலுடன் இருக்கும் பொழுதே, அந்த உடலின் மீது அபிமானம் இன்றி வாழ்கின்றவனும் “விதேக முக்தன்” எனப்படுகின்றான்.

இனி அவனும், அந்த ஆ(பரமா)த்மாவும் வேறு, வேறு அல்ல. இருப்பதெல்லாம் இறை(அ)வனே. இருக்கின்றவனும் இறை(அ)வனே. 

இவ்வாறு, உள்ளதை உள்ளபடி உணர்ந்துக் கொண்டவர்களுக்கே, 

‘உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானாற்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே.’ என்கின்றது திருமந்திரம்.

அதுவே, தெளிவற்றவர்கள் இந்த ஞானிக்கு முற்றிலும் விரோதமாக உலகப்பற்று கொண்டு, உலகப் பொருள்களை பற்றுகின்றபொழுது, மனம் எப்பொழுதும் இருமைகளில் சிக்கிக்கொண்டு, பாவ - புண்ணியங்களை உண்டாக்கிக் கொள்கின்றது.

மனதின் பல்வேறு அனுபவங்களினால் உண்டாகின்ற இருமைகளான நன்மை - தீமைகள், புண்ணிய - பாவங்களாக எவ்வாறு மாறுகின்றன என்பதை சாஸ்திரம் மூன்று கர்மங்களாக வகுத்து கொடுத்துள்ளது.

அவைகள், சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா, ஆகாமிய கர்மா எனப்படுகின்றது.

பல்வேறு பிறவிகளாக இருமைகளில் காரணமாக சேகரித்துக் கொண்ட ஒட்டு மொத்த பாவ - புண்ணியங்களின் தொகுப்பு “சஞ்சித கர்மா” எனப்படுகின்றது. இதுவே, காரண உடலில் சேகரிக்கப்பட்டுள்ளது.

ஸ்தூல உடலில் பிறவிக்கு வரும்பொழுது, அதிலிருந்து சிறிது கர்மவினைகளை மட்டும் எடுத்துக் கொண்டுவந்து, தற்பொழுது எடுத்துள்ள பூத உடலின் இறப்பு வரை, அனுபவித்து தீர்ப்பது “பிராரப்த கர்மா” எனப்படுகின்றது.

இவ்வாறு பூத உடல் எடுத்த பிறகு, மீண்டும் அந்த உடலைக் கொண்டு, இந்தப்பிறவியில் புதியதாக உண்டாக்கிக் கொள்கின்ற பாவ - புண்ணியங்களை “ஆகாமிய கர்மா” என்று அழைக்கப்படுகின்றது.

இவ்வாறு, மனதின் பல்வேறு எண்ணங்களினால், விளைந்த நன்மை - தீமைகள், பாவ - புண்ணியங்கள் என்ற இருமைகளான விகல்பங்கள் (மனதினால் உண்டாகும் சந்தேகங்கள்), காலம், மற்றும் இடத்தை (Time & Space) ஆதாரமாகக் கொண்டே விளைகின்றது. 

அதாவது, காலம் என்பதை நாம் நம் அனைவருக்கும் பொதுவானதான, வெளிப்புறத்தில் இருப்புடைய ஒரு விஷயமாகப் பார்க்கிறோம். 

உதாரணமாக, சென்னையில் இருந்து புறப்பட்ட ஒரு கார் தற்பொழுது கோவையில் இருக்கின்றது என்றால், இந்த பயணத்தின் இடையில் ‘காலம்’ கடந்து இருக்க வேண்டும்.

இது, நம்முடைய பார்வையில் பொருட்களின் அசைவுதான் ‘காலம்’ என்னும் உணர்வைத் தோற்றுவிக்கிறது.

ஒருவருடைய மரணத்தைக்கூட, அவரது உடலை அடிப்படையாகக் கொண்டே காலமாகி விட்டார் என்று நாம் அழைக்கின்றோம்.

அதாவது, அவருக்கு உடல் முன்பும் இல்லை, இனியும் இருக்கப்போவது இல்லை. இடையில் வந்த, உடலை காலமாகக் கருதப்படுகின்றது.

இதை நம் முன்னோர்கள் அறிந்திருந்தனர். நாம்தான் அறிய மறுக்கின்றோம்.

உண்மையில், மனதின் அனுபவ வெளியில் (பிரக்ஞையில்), ஒரு எண்ணத்திற்கும் மற்றொரு எண்ணத்திற்கும் இடையில் நிகழ்வதே காலம். 

அதாவது, இரண்டு நிகழ்வுகளுக்கு இடையில் உள்ள இடைவெளிதான் “காலம்” எனப்படுகின்றது.

காலம் என்பது இயக்கத்தின் அளவீடு. அது அளக்கும் அல்லது அறியும் கருவியை (பொருளை) பொருத்தது எனலாம்.

அதாவது, வேறு வகையில் கூறுவதென்றால், ஒன்றுமே இல்லாத, ஒன்றுமே நடக்காத உலகில் ‘காலம்’ என்ற ஒன்று இருக்காது.

தொடரும்... 🙏பராவித்யா Swami Prabanjanathan


தன்னை அறியும் மனம்
=====================

(பகுதி - 11)
----------------

பொதுவாக, மனமற்ற நிலை என்பது முக்குணங்களுக்கும் அப்பாற்பட்டது. அங்கு, கால, தேசம் கிடையாது. அந்நிலையில் மனம் என்ற மாயை மாண்டு விடுகின்றது. 

அதாவது, கடலை ஆழம்பார்க்கச் சென்ற உப்பு பொம்மை, அந்த கடல் நீரிலேயே கரைந்து விடுவது போன்று, சீவன் தன் வடிவத்தை இழந்து சிவம் என ஒன்றாகி விடுகின்றது.

இதுபோன்று, மனம் அந்த இறைவனுடன் இரண்டறக் கலந்துவிட்டால், அதற்கு தனியாக இருப்பு என்று இல்லாமல் போய் விடுகின்றது.

இதையே, நாம் மனம் அற்ற நிலை, அல்லது மனம் இறந்த நிலை என்கின்றோம்.

மற்றபடி, மற்றவர்கள் நினைத்துக்கொண்டிருப்பது போன்று, மனதைக் கொல்வது அல்லது அழிப்பது என்பது சாத்தியம் இல்லை. 

எண்ணங்களே தோன்றாமல் ‘கோமா’ நிலையில் இருக்கவும் முடியாது. 

எண்ணங்கள் அற்ற நிர்விகல்ப சமாதியில் சில காலம் இருக்கலாம் என்றாலும், சமாதி கலைந்து, விழிப்பு நிலைக்கு வந்தவுடன், மனதின் பழைய சம்ஸ்காரங்களுக்கு ஏற்ப, அதனுடன் சம்பந்தம் உண்டாகி, இந்த உலகம் மீண்டும் பழையபடி வந்து அப்படியே ஒட்டிக்கொள்கின்றது.

மேலும், எண்ணங்கள் இன்றியும், எதிலும் பற்று இன்றியும் மனம் இருக்க முடியாது. ஆனால், மனம் பற்ற வேண்டியதை பற்றினால், பற்று விட்டுப் போகும். 

இதையே, வள்ளுவப்பெருந்தகை கீழ்க்கண்ட குறட்பாவில்,

“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.”-  திருக்குறள்.

யாதொரு பற்றும் இல்லாத இறைவனைப் பற்றிக் கொண்டால், இந்த மனம் பற்றினை விட்டு விலகுதற்கு ஏதுவாக இருக்கும் என்கின்றார்.

ஆகவே, மனம் என்ற கருவியைக் கொண்டு மகத்தான பரம்பொருளை மட்டுமே பற்ற வேண்டும். அற்பமான உலகப்பொருளை பற்றுவதை விட்டு விலக வேண்டும்.

அதனால், மனதை நன்றாக அறிந்துக் கொண்டவன், அந்த மனதைக் கொண்டு, அற்ப பொருள்களைப் பற்றாமல், பரம்பொருளை மட்டும் பற்றிக்கொண்டு, அதையே எப்பொழுதும் எண்ணிக் கொண்டு இருப்பதினால், அதனுடன் இரண்டறக் கலந்து விடுகின்றான். 

அவனே ‘சீவன் முக்தன்’. அவன் இந்த உடலுடன் வாழும் பொழுதே இந்த உடல் பற்றுமின்றி இருக்கின்றான் அதனால், அவனே ‘விதேக முக்தன்’ எனவும் அழைக்கப்படுகின்றான்.

உடலை விட்ட பிறகு அடைகின்ற விதேக முக்தியை விட, உடலுடன் இருக்கும் பொழுதே, அந்த உடலின் மீது அபிமானம் இன்றி வாழ்கின்றவனும் “விதேக முக்தன்” எனப்படுகின்றான்.

இனி அவனும், அந்த ஆ(பரமா)த்மாவும் வேறு, வேறு அல்ல. இருப்பதெல்லாம் இறை(அ)வனே. இருக்கின்றவனும் இறை(அ)வனே. 

இவ்வாறு, உள்ளதை உள்ளபடி உணர்ந்துக் கொண்டவர்களுக்கே, 

‘உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானாற்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே.’ என்கின்றது திருமந்திரம்.

அதுவே, தெளிவற்றவர்கள் இந்த ஞானிக்கு முற்றிலும் விரோதமாக உலகப்பற்று கொண்டு, உலகப் பொருள்களை பற்றுகின்றபொழுது, மனம் எப்பொழுதும் இருமைகளில் சிக்கிக்கொண்டு, பாவ - புண்ணியங்களை உண்டாக்கிக் கொள்கின்றது.

மனதின் பல்வேறு அனுபவங்களினால் உண்டாகின்ற இருமைகளான நன்மை - தீமைகள், புண்ணிய - பாவங்களாக எவ்வாறு மாறுகின்றன என்பதை சாஸ்திரம் மூன்று கர்மங்களாக வகுத்து கொடுத்துள்ளது.

அவைகள், சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா, ஆகாமிய கர்மா எனப்படுகின்றது.

பல்வேறு பிறவிகளாக இருமைகளில் காரணமாக சேகரித்துக் கொண்ட ஒட்டு மொத்த பாவ - புண்ணியங்களின் தொகுப்பு “சஞ்சித கர்மா” எனப்படுகின்றது. இதுவே, காரண உடலில் சேகரிக்கப்பட்டுள்ளது.

ஸ்தூல உடலில் பிறவிக்கு வரும்பொழுது, அதிலிருந்து சிறிது கர்மவினைகளை மட்டும் எடுத்துக் கொண்டுவந்து, தற்பொழுது எடுத்துள்ள பூத உடலின் இறப்பு வரை, அனுபவித்து தீர்ப்பது “பிராரப்த கர்மா” எனப்படுகின்றது.

இவ்வாறு பூத உடல் எடுத்த பிறகு, மீண்டும் அந்த உடலைக் கொண்டு, இந்தப்பிறவியில் புதியதாக உண்டாக்கிக் கொள்கின்ற பாவ - புண்ணியங்களை “ஆகாமிய கர்மா” என்று அழைக்கப்படுகின்றது.

இவ்வாறு, மனதின் பல்வேறு எண்ணங்களினால், விளைந்த நன்மை - தீமைகள், பாவ - புண்ணியங்கள் என்ற இருமைகளான விகல்பங்கள் (மனதினால் உண்டாகும் சந்தேகங்கள்), காலம், மற்றும் இடத்தை (Time & Space) ஆதாரமாகக் கொண்டே விளைகின்றது. 

அதாவது, காலம் என்பதை நாம் நம் அனைவருக்கும் பொதுவானதான, வெளிப்புறத்தில் இருப்புடைய ஒரு விஷயமாகப் பார்க்கிறோம். 

உதாரணமாக, சென்னையில் இருந்து புறப்பட்ட ஒரு கார் தற்பொழுது கோவையில் இருக்கின்றது என்றால், இந்த பயணத்தின் இடையில் ‘காலம்’ கடந்து இருக்க வேண்டும்.

இது, நம்முடைய பார்வையில் பொருட்களின் அசைவுதான் ‘காலம்’ என்னும் உணர்வைத் தோற்றுவிக்கிறது.

ஒருவருடைய மரணத்தைக்கூட, அவரது உடலை அடிப்படையாகக் கொண்டே காலமாகி விட்டார் என்று நாம் அழைக்கின்றோம்.

அதாவது, அவருக்கு உடல் முன்பும் இல்லை, இனியும் இருக்கப்போவது இல்லை. இடையில் வந்த, உடலை காலமாகக் கருதப்படுகின்றது.

இதை நம் முன்னோர்கள் அறிந்திருந்தனர். நாம்தான் அறிய மறுக்கின்றோம்.

உண்மையில், மனதின் அனுபவ வெளியில் (பிரக்ஞையில்), ஒரு எண்ணத்திற்கும் மற்றொரு எண்ணத்திற்கும் இடையில் நிகழ்வதே காலம். 

அதாவது, இரண்டு நிகழ்வுகளுக்கு இடையில் உள்ள இடைவெளிதான் “காலம்” எனப்படுகின்றது.

காலம் என்பது இயக்கத்தின் அளவீடு. அது அளக்கும் அல்லது அறியும் கருவியை (பொருளை) பொருத்தது எனலாம்.

அதாவது, வேறு வகையில் கூறுவதென்றால், ஒன்றுமே இல்லாத, ஒன்றுமே நடக்காத உலகில் ‘காலம்’ என்ற ஒன்று இருக்காது.

தொடரும்... 🙏பராவித்யா Swami Prabanjanathan


தன்னை அறியும் மனம்
=====================

(பகுதி - 12)
----------------

காலம் என்பது வெளிப்புறமானது அல்ல என்னும் உண்மையை அறிந்து கொள்ளும் போதுதான் காலமற்ற பேருண்மையை அறிந்துக்கொள்ளும் சாத்தியமே உண்டாகின்றது. 

நினைவுகளுக்கு மதிப்பளிக்கத் தொடங்கும் பொழுதுதான் காலம் உள்ளே வருகின்றது. தொடக்கம்-இருப்பு-முடிவு என்று இருக்கும் எதுவும் காலத்துக்கு உட்பட்டது. 

‘காலமென்னும் நதி’ என்று காலத்துக்கு நதியின் ஓட்டத்தை உதாரணமாகக் கூறுகின்றார்கள். 

நதியின் ஓட்டத்தில் மூன்று காலங்களும் இணைகின்றன. கடந்து போன நீர் என்பது கடந்தது, இப்போது ஓடிக் கொண்டிருக்கின்ற நீர் என்பது இருப்பது, இனி, வரப்போகின்ற நீர் என்பது எதிர்ப்பார்ப்பது என இம் மூன்றையும், நாம் நீரில் தலை முழுகி எழுந்திருக்கும், அந்த ஒரு விநாடி நேரத்தில் அனுபவம் கொள்ள முடிவது நதியில்தான். 

அதாவது, நாம் ஓடுகின்ற நதி நீரில் குளிக்க மூழ்கும் பொழுது, அந்த விநாடியில் இனி வரப்போகின்ற நீரையும், முழுகும் போது வந்துவிட்ட நீரையும், முழுகிவிட்டு எழுவதற்குள் கடந்துபோன நீரையும் என எதிர்காலம், நிகழ்காலம், மற்றும் கடந்த காலம் என மூன்று காலங்களையும் ஒரு சேர ஒரு நொடியில் அனுபவிக்கின்றோம்.

அதுப்போன்றே, ஒரு விதை செடியாகி, மரமாகி, பூவாகி, காயாகி, கனியாகி, மீண்டும் விதையாகின்றது. இது ஒரு காலசுற்று. 

அதுவே, ஒரு விதை மரம் ஆக மாற பல ஆண்டுகள் எடுத்துக் கொள்கின்றது. இதில் காலம் என்பது படைக்கப்பட்ட உபாதிகளைப் பொருத்து மாறுபடுகின்றது. 

படைக்கப்பட்ட ஒவ்வொன்றும் ஒவ்வொரு அனுபவம் அடைகின்றது. ஓடும் நதிக்கு ஒரு நொடிக்குள் மூன்று காலமும் கடந்து விடுகின்றது. 

இருக்கின்ற மரமோ தற்பொழுது நிகழ்காலத்தில் இருக்கின்றது. 

மற்றொன்றோ இன்னும் படைக்கப்படவே இல்லை. 
எனவே, அது எதிர்காலத்தில் இருக்கின்றது. 

இருந்த ஒன்று தற்பொழுது இல்லாமல் கடந்த காலத்திற்கு சென்று விட்டது.

இவைகள் அனைத்துமாக படைக்கப்பட்ட மனம் இந்த காலச்சுற்றில் கடந்த காலம், நிகழ் காலம், இறந்த காலம் என மூன்று காலங்களை வகுத்துக்கொண்டு, அதில் சிக்கிக்கொண்டுள்ளது. 

அதனால்தான், இந்த மனதைக் கொண்டு அந்த பற்றற்றான் பற்றினை (பரம்பொருளை) பற்றுக என்றாலும், நாம் அது ஏதோ ஏழு கடல், ஏழு மலைகள் என கடந்து சென்று கண்டு பிடிக்கப்பட வேண்டிய ஒரு கடினமான பொருள் என்பது போன்று எங்கெங்கோ தேடி அழைகின்றோம். அதற்கான செயற்கரிய செயல்கள் பல செய்கின்றோம். 

உண்மையில் அது “நான் இருக்கின்றேன்” என்று நம் உள்ளத்தில்தான் உள்ளுணர்வாக இருப்பு கொண்டுள்ளது. இதை மட்டும் அறிய மறுக்கின்றோம்.

உண்மையில் அந்த ‘உணர்வு வெளி’ மட்டும்தான் எப்பொழுதும் ‘உள்ளது’, அது எந்த உள்ளீடும் இல்லாதது, அதன் சுயத் தன்மையில் பொருள் (Matter) எதுவும் இல்லை. அங்கு எதுவும் நடக்கவில்லை. அதனால் காலம் (Time) இல்லை. உண்மையில் ‘இப்போது’ என்பது மட்டும்தான் அதற்கு இருக்கிறது. அதுவே, முக்காலத்தையும் கடந்து இருக்கின்றது.

அதில் இருந்து வெளியே “நான்” என்று தனியாக இந்த மனம் வெளிப்பட்டவுடன்தான் இறந்தகாலம் பற்றி ‘நினைக்கிறது’, எதிர்காலம் பற்றிக் ‘கற்பனை’ செய்கின்றது. ஆகவே, காலம் என்பது நினைவுகள் சார்ந்த மனதில்தான் குடி கொண்டு இருக்கின்றது. 

இவ்வாறு காலமாக நிற்கும் மனம், உணர்வு வெளியில் காலமற்று மிதக்கிறது. இல்லாத காலம் இருப்பதாகத் தெரிவதுதான் காலத்தின் மாயை!.

இந்த “நான் இருக்கின்றேன்” என்ற உள்ளுணர்வு என்பதை, ஆ(பரமா)த்மாவின் சுய உணர்வு, பேருணர்வு, பேரறிவு என பலவாறாக அழைக்கலாம். 

அந்த உணர்வு வெளி எங்கும் நிறைந்துள்ளது போன்று, இந்த உடல் என்ற ஒவ்வொரு உபாதியிலும் இருக்கின்றது. அதனால்தான், இந்த உடலில் மிக சிறிய ஒரு எறும்பு ஊர்வதைக்கூட அந்த உடலின் உள்ளே குடி கொண்டுள்ள அந்த அறிவு உணர்கின்றது.

இதனை மனம் “நான்” என்று தன்னுடைய உணர்வாக பாவித்துக் கொள்கின்றது.

மனதுக்குள் ஓடும் எண்ணங்கள், அதன் விளைவாக உண்டாகும் உணர்ச்சிகள், கனவுகளாக ஓடும் கற்பனை பிம்பங்கள் என எதற்கும், இந்த உள்ளுணர்வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

மனதின் வெளிப்பாடுகள் அனைத்தும், மனம் கற்பித்துக்கொண்ட கற்பனையே.

நம் ஒவ்வொருவருக்கும் தனித் தனியான ஒரு ‘நான்' இருக்கின்றது என்றும், உன்னுடைய ‘நான்' வேறு, என்னுடைய ‘நான்' வேறு என்றும் எண்ணிக் கொண்டிருப்பது போன்று, உண்மையில் நம்முடைய மனதிற்கும், உடலுக்கும் ‘நான்' என்னும் சுயப் பிரக்ஞை என்பது கிடையாது.

‘நான் இன்னார்' என்று நாம் ஒவ்வொருவரும் நம்பிக் கொண்டிருப்பது அனைத்தும், நம்முடைய எண்ணங்களும், அதன் நினைவுகளும் புத்தியும், சேர்ந்து மனதில் சேகரித்துக் கொண்டிருக்கும் ஒரு கற்பனையான பதிவு. இது நாம் குழந்தையாக பிறந்து, இப்பொழுது வளர்ந்து இருக்கின்ற இந்தப் பருவம்வரை கற்பிக்கப்பட்டுள்ளது.

உண்மையின் இயல்பான பிரக்ஞை அல்லது உள்ளுணர்வு யாருக்கும் சொந்தமானது இல்லை. அது எல்லையும், வடிவமுமற்ற ஒரு உணர்வுவெளி. 

அது அகண்டாகாரமானது. அதுமட்டுமே அனைத்தையும் உணர்கின்றது அதுவே ஆ(பரமா)த்மா. அதற்கு ஈடு இணை எதுவுமே இல்லை. அதற்கு வரையறுக்கப்பட்ட எல்லையே கிடையாது. 

எங்கும், எதிலும் நீக்கமற நிறைந்துள்ள அந்த பேருணர்வு ஒன்று மட்டுமே, உபாதிகளாக உடலைக் கொண்ட, ஒவ்வொரு சீவனின் உள்ளேயும் பிரக்ஞையாக, உள்ளுணர்வாக பிரதிபலிக்கின்றது.

இதை, ஒவ்வொரு சீவனும் தன்னுடைய அறியாமையின் காரணமாக, அந்தப் பேருணர்வின் பிரதிபலிப்பைத் தன்னுடையதாக நினைத்துக்கொண்டு, தனியான ஒரு ‘நான்' இருப்பதாக மனதில் கற்பித்துக் கொண்டு, தன்னை உடலாகக் கருதி, தன்னிடம் இருந்து அந்த உள் உணர்வு, வெளிப்படுவதாக நம்புகின்றது.

ஒரு சீவனின் மரணத்தின்போது மனதின் அடுத்த பரிமாணமான புத்தி சக்தி செயலற்றுப் போய்விடுகிறது. அதனால், அதில் உணர்வு ரீதியான ‘நான்' என்பது பிரதிபலிப்பதில்லை. அதனால்தான், இறந்த ஜட உடலின் (சடலத்தின்) மீது ஈக்கள் மொய்த்தாலும் அதனால் உணர முடிவதில்லை.

இது நாள்வரை, அந்த உடலிலும், மனத்திலும் தனித்து இயங்கிய சுய உணர்வு மறுபடியும் அகண்ட உணர்வு மண்டலத்தில் போய் ஒன்றாய்க் கலந்து விடுகின்றது.

ஆகவே, நம் அனைவரின் ‘உள்’ இருந்து இயங்கும் அந்தர்யாமியான ‘நான்' ஒரே ‘நான்தான்’. வெட்டவெளி முழுவதிலும் அந்த ஒரே ஒரு ‘நான்'தான் இருந்துக் கொண்டு இயங்குகின்றது.

இந்த உண்மையை அறிந்து, இந்த தேகாத்ம புத்தியை (‘இந்த உடல் மட்டும்தான் நான்’ என்னும் கருத்தை) விடுத்து, தனக்குள் இருந்து இயங்கும் பிரக்ஞை என்ற பேருணர்வு என்பது, உண்மையில் அகண்டமான பிரபஞ்சப்பேருணர்வு என்று புரிந்து கொண்டால்தான் ‘இருப்பதெல்லாம் இறைவ(நா)னே’ என்னும் கருத்தின் ஆழமான உட்பொருளை நாம் அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொள்ள முடியும். 

நம் ஒவ்வொருவரின் உள்ளே இருந்து இயங்கும் அந்த அகண்டாகாரமான ‘நான்'தான் உண்மையில் நம் ஒவ்வொருவரின் உடல் - மனம் வழியாகத் தன்னை அறிந்து கொள்கின்றது என்னும் உண்மை புரியும்போது, அந்த பக்குவப்பட்ட மனதின் தளத்திலிருந்து நம்மை நாமே பார்த்துக்கொள்ள முடியும்.
 
அதாவது, “நான் இருக்கின்றேன்” என்ற தன் இருப்பு, எப்பொழுதும் நம் உள்ளே உள் உணர்வில் உணர்த்திக் கொண்டே இருக்கின்றது. அதுவே எங்கும் நிறைந்த நாம் தேடிக்கொண்டிருக்கின்ற இறைவன் என்பதும், அதுவே, ‘நான்’ என்று தன் சொரூபத்தை உணர்வதும் சாத்தியமாகின்றது.

இதை நாம் அறியாமல், நம்முடைய மனதின் அடுத்த பரிமாணமான அஹங்காரத்தின் வாயிலாக “நான்” என்று இந்த உடலையும், மனதையும் கருதிக் கொள்வதினால், அந்த ஆ(பரமா)த்மாவின் பேருணர்வை பெரும்பாலும் உணர்ந்துக்கொள்வதில்லை.

அது மனதிற்கும், உடலுக்கும் அப்பாற்பட்டது என்பதை, நாம் என்று உணர்கின்றோமோ, அப்பொழுதே நாம் இந்த உடலை அபிமானிப்பதை விடுத்து, அந்த உடலுக்குள் இருக்கும் ‘உள் உணர்வை’ அபிமானிக்கத் தொடங்கி விடுவோம். 

இது ஒன்றே நாம் அந்த பரம்பொருளிடம் இரண்டறக் கலக்கின்ற எளிய வழி. இது எப்பொழுதும் சாத்தியம். இதற்கு கால, தேசம் தேவையில்லை. இப்பொழுதும் அது இருக்கின்றது, இனியும் இருக்கும், இதற்கு முன்பும் அது இருந்தது.

இனி “நான் இருக்கின்றேன்” என்ற அந்த உள் உணர்வு ஒன்று மட்டுமே எப்பொழுதும் தன் இருப்பு கொண்டுள்ளது. 

“அதுவேநான்”, “நானே அனைத்துமாக இருக்கின்றேன்”.

இந்த உண்மை தெளிவாகப் புரியும்போது, ‘நான்`, ‘எனது’ என்ற அபிமானம் அற்று போகும். உடல் பற்று விட்டு போகும். மரணம் என்பது ஏதுமில்லை என்று தெரியவரும். மரண பயம் என்பது முற்றிலும் அற்றுப் போய்விடும். 

உடலின் அழிவை நம்முடைய மரணம் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றோம் என்ற புரிதல் வரும். அதன்பிறகுதான் இந்த மாபெரும் பிரபஞ்சத்தை, வெட்டவெளியை, தன் உடலாகக் காண முடியும்.

இந்த அரிதான மனித உடலும், மனமும், கிடைத்ததின் அடிப்படைப் பயனே, இந்த ஜாலம் மிகுந்த மாயா அனுபவத்தின் வாயிலாக நாம் இந்தப் பிரபஞ்சம்தான் என்னும் உண்மையை உணர்ந்து கொள்வதற்குத்தான்.

தொடரும்…🙏பராவித்யா Swami Prabanjanathan


No comments:

Post a Comment